செய்திகள்
பழைய பிளாஸ்டிக் குடோனில் எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

திருமுடிவாக்கத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

Published On 2020-09-25 02:16 GMT   |   Update On 2020-09-25 02:16 GMT
திருமுடிவாக்கத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
பூந்தமல்லி:

குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம், சிப்காட் பகுதியில் சென்னையை அடுத்த குரோம்பேட்டையை சேர்ந்த முருகன் என்பவரது குடோன் உள்ளது. இங்கு பழைய பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து வைத்து, தரம் பிரித்து மறுசுழற்சி செய்யப்படுகிறது.

நேற்று காலை இந்த குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் குடோன் முழுவதும் தீ பரவியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் பூந்தமல்லி, தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருந்தது.

இதையடுத்து கிண்டி, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. குடோன் முழுவதும் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை மூட்டம் எழுந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணிநேர போராட்டத்துக்கு பிறகு குடோனில் எரிந்த தீயை முற்றிலும் அணைத்தனர். எனினும் தீ விபத்தில் குடோனில் இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின.

தீ விபத்து காரணமாக அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. குடோனின் அருகில் உள்ள மின் கம்பங்களில் இருந்த மின்சார வயர்கள் தீயில் கருகின. தீ விபத்துக்கான காரணம் குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த பகுதிகளில் விதிமுறைகளை மீறி அதிகளவில் குடோன்கள் செயல்பட்டு வருவதால் தீ விபத்துகளும், கொள்ளை சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை வருவாய் துறை அதிகாரிகளும், போலீசாரும் கண்காணிக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News