செய்திகள்
தற்கொலை

குன்றத்தூரில் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-09-24 02:16 GMT   |   Update On 2020-09-24 02:16 GMT
குன்றத்தூரில் டி.வி. உடைந்ததால் பெற்றோர் திட்டுவார்களே என்ற அச்சத்தில் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான்.
பூந்தமல்லி:

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்தவர் வடிவேல். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா. தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் பிரைட் ஷாம் (வயது 14), 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் விளையாடி கொண்டிருந்த பிரைட் ஷாம் திடீரென அறைக்குள் சென்றவன் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் அவரது நண்பர்கள் அறைக்குள் பார்த்தனர்.

அப்போது பிரைட் ஷாம் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் பிரைட் ஷாமை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோனி சகாய பரத் விசாரணை செய்ததில் வீட்டில் இருந்த டி.வி.யை பிரைட் ஷாம், சானிடைசர் கொண்டு துடைத்தபோது டி.வி பழுதடைந்து உடைந்து விட்டதாகவும், பெற்றோர் திட்டுவார்களே என்ற அச்சத்தில் பிரைட் ஷாம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அவனது பெற்றோரிடம் கேட்டபோது வயிற்று வலியால் பிரைட் ஷாம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News