செய்திகள்
மீட்கப்பட்ட செல்போன்களை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் பார்வையிட்ட போது எடுத்தபடம்.

திருச்சி நகரில் திருட்டு போன ரூ.16¼ லட்சம் மதிப்புள்ள 130 செல்போன்கள் மீட்பு

Published On 2020-09-23 13:16 IST   |   Update On 2020-09-23 13:16:00 IST
திருச்சி நகரில் பல இடங்களில் திருட்டு போன ரூ.16¼ லட்சம் மதிப்புள்ள 130 செல்போன்களை மீட்டு அதனை உரியவர்களிடம் போலீஸ் கமிஷனர் ஒப்படைத்தார்.
திருச்சி:

திருச்சி நகரில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் மற்றும் பஸ் பயணம், வணிக நிறுவனங்களில் பொருட்கள் வாங்குவதற்காக வந்த பொதுமக்களிடமிருந்து செல்போன்கள் திருடப்பட்டுள்ளன. மேலும் சில இடங்களில் பொதுமக்களும் கவனக்குறைவாக தங்களது செல்போன்களை தவறவிட்டு உள்ளனர். இதுதொடர்பாக திருச்சி கண்டோன்மெண்ட் மற்றும் கோட்டை குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்களில் ஏராளமான புகார்கள் செய்யப்பட்டிருந்தன.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் இதுபற்றி விசாரணை நடத்த ஒரு தனிப்படை அமைத்தார். திருச்சி மாநகர சைபர் கிரைம் மற்றும் கோட்டை, கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையங்களில் உள்ள அதிகாரிகள், போலீசார் இந்த தனிப்படையில் இடம் பெற்று இருந்தனர்.

இவர்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் தீவிரமாக துப்பு துலக்கி 8 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து விலை உயர்ந்த 130 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.16 லட்சத்து 31 ஆயிரம் ஆகும்.

இந்த செல்போன்களை நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உரியவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, சிறப்பாக துப்பு துலக்கி செல்போன்களை மீட்ட காவல் அதிகாரிகளை பாராட்டுகிறேன். திருச்சி மாநகரில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காகவும் போலீஸ் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவை ஏற்படுத்துவதற்காகவும் போலீசார் மற்றும் பொதுமக்களை இணைத்து ‘வாட்ஸ்-அப்’குழு ஒன்று விரைவில் அமைக்கப்படும். இதன் மூலம் புகார் மற்றும் பல்வேறு தகவல்களை பெற்று குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பாகவே அவற்றை தடுக்க முடியும்‘ என்றார். இந்த நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் பவன் குமார் ரெட்டி (சட்டம்- ஒழுங்கு), வேதரத்தினம் (குற்றம் மற்றும் போக்குவரத்து), கூடுதல் துணை கமிஷனர் ரமேஷ் பாபு உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News