செய்திகள்
வேலூர் அருகே மயக்க ஸ்பிரே அடித்து மாணவி பாலியல் பலாத்காரம்
கல்லூரிக்கு ரெக்கார்டு நோட்டு கொண்டு வருமாறு செல்போனில் அழைத்து, முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து பாலியல் பலாத்காரம் செய்ததால், 7 மாத கர்ப்பமாக இருப்பதாக மாணவி அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க இளம்பெண், பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். உடல்நலக்குறைவால் மாணவி 16-ந்தேதி வடுகந்தாங்கலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு, அவரின் உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதித்தனர். அதில், மாணவி 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து டாக்டர்கள், அவரிடம் கேட்டதற்கு உரிய பதில் தெரிவிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி பிரியங்கா மற்றும் சமூக நல ஊழியர் சாந்தி ஆகியோர் அங்குச் சென்று விசாரித்தனர்.
அப்போது மாணவி கடந்த ஜனவரி மாதம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவருடன் திருமணம் நடந்ததாகவும், கணவர் தற்போது விஜயவாடாவில் இருப்பதாகவும் தெரிவித்தார். மாணவியின் கழுத்தில் தாலி இல்லாததால் சந்தேகம் அடைந்த மைய நிர்வாகி மனநல ஆலோசனை வழங்கினார்.
அப்போது மாணவி கூறியதாவது:-
கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி கல்லூரிக்கு ரெக்கார்டு நோட்டு கொண்டு வருமாறு தந்தையின் செல்போனில் பேசிய நபர் தெரிவித்தார். அதன்பேரில் கல்லூரிக்கு புறப்பட்டுச் சென்றேன். கல்லூரி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, பின்னால் வந்த நபர் திடீரென முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்தார்.
இதனால் மயக்கமடைந்த நான் சில மணிநேரத்துக்கு பின்னர் கண்விழித்து பார்த்தபோது ஒரு அறையில் நாற்காலியில் அமர்ந்திருந்தேன். அருகில் கல்லூரியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் இருந்தார். அவர், இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டினார். இதனால் எனது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. அவர், என்னை பாலியல் பலாத்காரம் செய்ததால், தற்போது நான் கர்ப்பமாக உள்ளேன்.
இவ்வாறு மாணவி கூறினார்.
பின்னர் மாணவி தெரிவித்ததைப் புகாராக எழுதி பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகியிடம் அளித்தார். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.