செய்திகள்
நீட் தேர்வு

கோவையில் நாளை 16 மையங்களில் நீட் தேர்வு

Published On 2020-09-12 07:53 GMT   |   Update On 2020-09-12 07:53 GMT
கோவை மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக 16 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியளவில் முடிவடையும்.
கோவை:

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் ஆகும். இதற்காக வருடந்தோறும் நீட் தேர்வு நடந்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நாளை நடக்கிறது. இதற்கான ஹால்டிக்கெட்டுகள் ஏற்கனவே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக 16 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியளவில் முடிவடையும். ஒவ்வொரு அறையிலும் 12 மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதும் வகையில் சமூக இடைவெளியை கடைபிடித்து தேர்வறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு எழுதும் மாணவர்களை கண்காணிக்க ஒரு தேர்வறைக்கு 2 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 11 மணியளவில் தேர்வு மையத்திற்கு வர வேண்டும். பின்னர் 11.30 மணியளவில் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் ஒவ்வொருவராக அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து அங்கு அவர்களுக்கு தெர்மல் மீட்டர் மூலம் காய்ச்சல் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்படும்.

பின்னர் 1.30 மணியளவில் ஒவ்வொரு மாணவர்களாக சமூக இடைவெளியை கடைபிடித்து தேர்வு அறைக்கு அனுப்பப்படுவர். இவர்களில் யாருக்காவது உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அவர்களுக்கு என தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு வைத்து அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். விருப்பபட்டால் அவர்கள் கையுறையும் அணிந்து கொள்ளலாம்.

தேர்வுக்கான அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

மாணவர்களுக்கு இலவசமாக தேர்வாணையம் சார்பில் முக கவசங்கள் வழங்கப்படுகிறது. மேலும் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு மின்சார வாரியத்தின் சார்பில் தடையில்லா மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு அந்தந்த மையங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.
Tags:    

Similar News