செய்திகள்
மரணம்

துரைப்பாக்கத்தில் பரோட்டா சாப்பிட்ட 12 வயது சிறுவன் திடீர் மரணம்

Published On 2020-09-12 02:03 GMT   |   Update On 2020-09-12 02:03 GMT
ஓட்டலில் பரோட்டா மற்றும் பிரியாணி சாப்பிட்ட 12 வயது சிறுவன் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆலந்தூர்:

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பாரிநகர் 5-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் தினேஷ் (வயது 12). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தினேஷ், பிரியாணி மற்றும் பரோட்டா சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

சற்று நேரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் துடிதுடித்தார். உடனடியாக அவரை சீவரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நள்ளிரவில் மீண்டும் வலியால் துடித்து சிறுவன் திடீரென மயங்கினான். உடனடியாக ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், தினேஷ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தினேசின் சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News