செய்திகள்
பச்சிளம் குழந்தை தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட இடத்தில் போலீசார் தடயங்களை சேகரித்தபோது எடுத்தபடம்.

பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை எரித்துக் கொலை: தாய்-பாட்டி கைது

Published On 2020-09-10 04:12 GMT   |   Update On 2020-09-10 04:12 GMT
சங்கரன்கோவிலில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தீ வைத்து எரித்துக் கொலை செய்த கொடூர தாய், பாட்டியை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரெயில்வே பீடர் ரோடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தியேட்டர் உள்ளது. அதன் வளாகத்தில் காலி இடத்தில் நேற்று அதிகாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனே அந்த வழியாக நடைப்பயிற்சி செய்தவர்கள் சென்று பார்த்த போது பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் தீயில் கருகிய நிலையில் கிடந்தது.

இதை அறிந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் விரைந்து சென்று பார்த்த போது, கருகிய நிலையில் குழந்தை உடலும், பாதி எரிந்த நிலையில் துணிப்பையும் கிடந்தன. குழந்தை எரித்துக் கொல்லப்பட்ட இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் டைகர் வரவழைக்கப்பட்டது. அது, சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு, சங்குபுரம் 6-வது தெருவில் இருக்கும் சண்முகவேலின் வீட்டின் முன்பு ஓடி நின்றது.

இதையடுத்து சண்முகவேலின் குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சங்கரன்கோவில் திருப்பூர் குமரன் நகரை சேர்ந்தவர் சண்முகவேல். சமையல் தொழிலாளி. இவருடைய மனைவி இந்திராணி. இவர்களுடைய மகள் சங்கரகோமதி (வயது 22). இவருக்கும், மற்றொரு பிரிவை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் சங்கரகோமதி கர்ப்பமானார்.

திருமணத்துக்கு முன்னரே சங்கரகோமதி கர்ப்பமானதால், அவமானம் அடைந்த சண்முகவேலின் குடும்பத்தினர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களது வீட்டை காலி செய்து விட்டு, சங்கரன்கோவில் சங்குபுரம் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினர்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சங்கரகோமதிக்கு வீட்டிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்துக்கு முன்னரே குழந்தை பிறந்ததால் அவமானமாக கருதிய குடும்பத்தினர், பச்சிளம் குழந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி நேற்று அதிகாலையில் சங்கரகோமதி, அவருடைய தாய் இந்திராணி ஆகிய 2 பேரும் சேர்ந்து குழந்தையை தூக்கிக் கொண்டு, அங்குள்ள தனியார் தியேட்டர் வளாகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு துணிகளுடன் சேர்த்து குழந்தையையும் தரையில் கிடத்தி, அதன் மீது மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதில் குழந்தை தீயில் எரிந்து உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

குழந்தையை கொடூரமாக எரித்துக் கொலை செய்த தாய் சங்கரகோமதி, இந்திராணி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக சங்கரகோமதியின் காதலனையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News