செய்திகள்
நாஷியா பாத்திமா

பூனை குதித்து ஓடியதால் டி.வி. விழுந்து 2 வயது குழந்தை பலி

Published On 2020-09-06 09:19 IST   |   Update On 2020-09-06 09:19:00 IST
சென்னை அயனாவரத்தில் பூனை குதித்து ஓடியதால் டி.வி. விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:

சென்னை அயனாவரம் சூளைமேடு தெருவைச் சேர்ந்தவர் மாதர் மொய்தீன். ஏ.சி. மெக்கானிக். இவருடைய மனைவி ரே‌‌ஷ்மா. இவர்களின் ஒரே மகள் நா‌ஷியா பாத்திமா (வயது 2). நேற்று மாலை 5 மணியளவில் குழந்தை நா‌ஷியா பாத்திமா வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தது.

அப்போது வீட்டுக்குள் நுழைந்த ஒரு பூனை, பீரோ மீது ஏறி அங்கிருந்து டி.வி.யின் மேல் குதித்து ஓடியது. இதில் டி.வி. வைக்கப்பட்டு இருந்த நாற்காலி சரிந்ததால் கீழே தரையில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் முகத்தில் டி.வி. விழுந்தது.

இதில் குழந்தையின் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர், உடனடியாக குழந்தையை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை நா‌ஷியா பாத்திமா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதை கேட்டதும், தங்களது ஒரே மகளின் உடலை பார்த்து அவரது பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து தலைமைச் செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News