செய்திகள்
வேலூரில் பறிமுதல் செய்யப்பட்ட கம்ப்யூட்டர் மற்றும் இணையதள சேவை கருவிகளை படத்தில் காணலாம்.

வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் அதிரடி சோதனை- வீடு வாடகைக்கு எடுத்து ஹவாலா பணப்பரிமாற்றம்?

Published On 2020-08-08 08:32 GMT   |   Update On 2020-08-08 08:32 GMT
வேலூரில் வீடு வாடகைக்கு எடுத்து ஹவாலா பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதா? என்பது குறித்து திட்டமிட்ட குற்ற நுண்ணறிவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக தஞ்சாவூரை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர்:

தமிழகத்தில் சில குறிப்பிட்ட இடங்களை மையமாக கொண்டு மர்மகும்பல் ‘இன்டர்நெட்’ அழைப்புகள் மூலம் ‘ஹவாலா’ பணப்பரிமாற்றம் மற்றும் ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுவதாக ஒருங்கிணைந்த திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு (ஓ.சி.ஐ.யு.) காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து நடந்த விசாரணையில் வேலூர் சார்ப்பனாமேடு சஞ்சீவிபிள்ளை தெருவில் உள்ள ஒரு வீட்டை ‘ஐ.பி.’முகவரியை கொண்டு போலீசார் சந்தேகித்தனர். மேலும் அதேபோன்று சென்னை, திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் சில இடங்களையும் சந்தேகப்பட்டனர்.

இந்தநிலையில் வேலூர் உள்பட 4 இடங்களிலும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு, நேற்றுமுன்தினம் நள்ளிரவில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

அதன்படி, வேலூர் சார்ப்பனாமேடு, சஞ்சீவிபிள்ளை தெருவில் உள்ள ஒரு வீட்டில் வேலூர் ஓ.சி.ஐ.யு. துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், வேலூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையிலான குழுவினர் சோதனையை தொடங்கினர். அப்போது வீட்டில் யாரும் இல்லை. இதனால், கதவின் பூட்டை உடைத்து உள்ளே போலீசார் சென்றனர். அப்போது வீட்டினுள் இயங்கிய நிலையில் கம்ப்யூட்டர் இருந்தது.

இதையடுத்து, போலீசார் சி.பி.யு., கம்ப்யூட்டர், இணையதள சேவை கருவிகள், 2 பேட்டரிகள் உள்ளிட்ட சில பொருட்களையும், சில ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர்.

அந்த வீட்டின் உரிமையாளர் பாபு. அவரிடம் கடந்த ஜனவரி மாதம் ஒருவர் வந்து, அந்த வீட்டை வாடகைக்கு கேட்டுள்ளார். அந்த நபர் பாபுவிடம், தன்னுடைய பெயர் சிராஜ் என்றும் சென்னையில் உள்ள கண்ணையன் சம்பத் என்பவரின் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதை நம்பிய பாபு அந்த நபருக்கு வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளார்.

பின்னர் அந்தநபர் கம்ப்யூட்டர் மற்றும் இணைய வசதிகளை வீட்டில் ஏற்படுத்தி உள்ளார். அதன்பின்பு அந்த நபர் சென்னைக்கு சென்றுவிட்டார். வேலூர் வீட்டுக்கு வருவதில்லை. ஆனால் வீட்டு வாடகையை மட்டும் பாபுவின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் செலுத்தி வந்து உள்ளார்.

மேலும் சிராஜ் இணைய சேவையில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டாலோ, கணிணியை மீண்டும் இயக்குவதற்கோ அருகே வசிப்பவர்களை செல்போனில் தொடர்புகொண்டு சரி செய்து கொடுக்கும்படி கூறுவார் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதனிடையே சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற சோதனைக்கு பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் ஆவணங்கள் சிலவற்றையும் ஓ.சி.ஐ.யு. போலீசார் எடுத்துச் சென்றனர். கம்ப்யூட்டரை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் வீட்டின் உரிமையாளர் பாபுவிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

தமிழகத்தில் முக்கிய 4 இடங்களில் இந்த சோதனை ஒரே நேரத்தில் தொடங்கியது. வேலூரில் யாரும் கைது செய்யப்படவில்லை. இதில் தொடர்புடைய நபர் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது. மேலும், வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ‘ஹவாலா’ பணப்பரிமாற்றம் செய்யும் பணிக்காக இந்த 4 மையங்களை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கருதுகிறோம். இதில் தொடர்புடைய நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

தீவிரவாத குழுக்களுக்கோ, தேசவிரோத குழுக்களுக்கோ ஏதேனும் பணம் அனுப்பப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது. பாபுவின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்ட விவரம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த சோதனையையொட்டி போலீசார் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

சார்ப்பனாமேடு சஞ்சீவி பிள்ளை தெருவில் பாபு என்பவருக்கு சொந்தமான வீட்டை சோதனை செய்தபோது, அங்கு போலியாக இணையவழி மூலமாக தொலைபேசி அழைப்புகள் வழங்கும் சேவை மையம் எந்தவித உரிமமும் பெறாமல் ‘பி.கே.எஸ். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனம்’ என்ற பெயரில் செயல்பட்டு வந்தது. விசாரணையில் அந்த இடத்தை கண்ணையன் சம்பத் கடந்த 6 மாதமாக வாடகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார்.

இதில் தொடர்புடைய சந்தேக நபரான தஞ்சாவூரை சேர்ந்த முருகானந்தம் என்பவரை தஞ்சாவூரில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தலைமறைவாக உள்ள கண்ணையன்சம்பத்தை கைது செய்ய தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News