செய்திகள்
நீலகண்டன் - பர்வதவர்த்தினி - ஜெய்ஹரிகிருஷ்ணன்

காபியில் விஷம் கலந்து 2 மகன்கள்-மகளுக்கு கொடுத்த பெண் - தானும் குடித்து தற்கொலை

Published On 2020-08-05 09:02 GMT   |   Update On 2020-08-05 09:02 GMT
வீட்டை காலி செய்ய வற்புறுத்தியதால் மனவருத்தம் அடைந்த பெண், தனது 2 மகன்கள், மகளுக்கு காபியில் விஷம் கலந்து கொடுத்தார். பின்னர் அவரும் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தேவகோட்டை:

வீட்டை காலி செய்ய வற்புறுத்தியதால் மனவருத்தம் அடைந்த பெண், தனது 2 மகன்கள், மகளுக்கு காபியில் விஷம் கலந்து கொடுத்தார். பின்னர் அவரும் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவருடைய பிள்ளைகள் 3 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சிதம்பரநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் கடந்த 4 மாதத்திற்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார். இவருடைய மனைவி பிரியதர்சினி (வயது 36). இவர்களுக்கு பர்வதவர்த்தினி (16) என்ற மகளும், நீலகண்டன் (15), ஜெய்ஹரிகிருஷ்ணன்(11) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் ராமதாசின் பெரியம்மாள் வசந்தி(75) என்பவரது வீட்டின் மாடியில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் ராமதாஸ் இறந்த பின்னர் வீட்டை காலி செய்யும்படி பிரியதர்சினியிடம், வசந்தி வற்புறுத்தினாராம். இதனால் வசந்தி மற்றும் பிரியதர்சினிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

நேற்று முன்தினம் மாலையில் வசந்தியின் தம்பியும் காரைக்குடி தனியார் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிபவருமான ராஜேந்திரன் அங்கு வந்து வசந்திக்கு ஆதரவாக பேசி, பிரியதர்சினியிடம் வாக்குவாதம் செய்து அவரை தாக்க முயன்றதாகவும் தெரியவருகிறது.

இதனால் மனவருத்தம் அடைந்த பிரியதர்சினி தனது 3 பிள்ளைகளுக்கும் காபியில் விஷம் மற்றும் எலி மருந்தை கலந்துகொடுத்து விட்டு அவரும் குடித்துள்ளார்.பின்னர் 4 பேரும் அடுத்தடுத்து வீட்டில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினர். இதை அக்கம்பக்கத்தினர் கவனித்து, பிரியதர்சினியின் தாயார் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் தாயும், அவருடைய மகள் மற்றும் 2 மகன்களும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியதர்சினி பரிதாபமாக இறந்தார்.

அவருடைய மகள், மகன்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் 3 பேரும் மேல்சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News