செய்திகள்
சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங் பேடி ஆய்வு செய்தபோது எடுத்த படம்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஆய்வு

Published On 2020-06-27 12:41 IST   |   Update On 2020-06-27 12:41:00 IST
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி நேற்று ஆய்வு செய்தார்.
கடலூர்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இதை தடுக்கவும், கண்காணிக்கவும் மாவட்டந்தோறும் முதன்மை செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சிறப்பு அதிகாரிகளாக தமிழக அரசு நியமித்தது. இதன்படி கடலூர் மாவட்டத்திற்கு கொரோனா தடுப்பு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் மற்றும் அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் அவர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக நேற்று கடலூர் வந்தார். அவரை மாவட்ட எல்லையான ரெட்டிச்சாவடியில் கலெக்டர் அன்புசெல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து அவர் சின்னகங்கணாங்குப்பத்தில் வெளி மாநில, மாவட்டத்தில் இருந்து கடலூர் மாவட்டத்திற்குள் வருவோரை சோதனை செய்வதற்காக போடப்பட்ட சோதனைச்சாவடியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்பிறகு அங்கு சுகாதாரத்துறையினர் அமைத்துள்ள முகாமை பார்வையிட்டு, அங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்களை நேரில் சந்தித்து பேசினார்.

அதன்பிறகு கொரோனா பாதித்தவர்களில் அதிகம் உள்ளதால் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட ஆல்பேட்டை கன்னிக்கோவில் தெரு, திருப்பாதிரிப்புலியூர் போடிச்செட்டி தெரு, வெள்ளிமோட்டான்தெரு ஆகிய பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அந்த பகுதியில் செய்துள்ள சுகாதாரப்பணிகளையும், தடுப்பு நடவடிக்கைகளையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து கட்டுப்பாட்டு பகுதியான சிதம்பரம் மீதிக்குடி, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, விடுதி ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டு, அங்கு கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை, சுகாதாரப்பணிகள் போன்றவற்றையும், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களையும் நேரில் பார்வையிட்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

முன்னதாக கடலூர் சின்னகங்கணாங்குப்பத்தில் ககன்தீப்சிங்பேடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு வழங்கிய அறிவுரைகளை ஏற்கனவே காணொலி காட்சி மூலம் கலெக்டரிடம் விளக்கி உள்ளேன். காய்ச்சல், சளி, இருமல், சுவாசப்பிரச்சினை இருந்தால் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள், கடந்த 10 நாட்களாக யார், யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்ற விவரத்தை கண்டிப்பாக அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் அவர்களையும் கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக இருக்கும்.

கடலூர் மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகள் உள்ளன. இவை அனைத்திலும் தேவையான படுக்கை வசதிகளை, மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒரு மருத்துவமனையில் நோய் தொற்று உள்ளவர்கள் 60 அல்லது 70 பேருக்கு மேல் வந்து விட்டால், தாமதமின்றி அடுத்த மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பி, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

தற்போது கடலூர், சிதம்பரம் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர், வென்டிலேட்டர், உமிழ்நீர் பரிசோதனை கருவி, என் 95 முக கவசம் போன்றவை இருக்கிறதா? ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா? என்று கண்டறிந்து, தேவைக்கேற்ப அவற்றை வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

காய்ச்சல், இருமல், சளி, சுவாச பிரச்சினை இருந்தால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம். ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்தால் பாதுகாப்பாக இருக்கலாம். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் நோய் தொற்று பரவுவதை தடுக்கலாம்.

இவ்வாறு சிறப்பு அதிகாரி ககன்தீப்சிங்பேடி கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதா மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News