செய்திகள்
வாகன சோதனை

கடலூர் மாவட்ட எல்லைகள் மூடல்- வெளியூர் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

Published On 2020-06-26 12:54 IST   |   Update On 2020-06-26 12:54:00 IST
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடலூர் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. இதனால் வெளியூரில் இருந்து வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
கடலூர்:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது 5-வது கட்டமாக வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்திய போதிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வருகிற 30-ந் தேதி வரை வாகன போக்குவரத்தில் மண்டல முறையை தற்காலிகமாக ரத்து செய்து, மாவட்டத்திற்குள் மட்டும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என்றும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெற வேண்டும் என்றும், பஸ் போக்குவரத்து மாவட்டங்களுக்குள் மட்டும் செயல்பட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று முதல் வாகன போக்குவரத்தில் மண்டல முறை ரத்து செய்யப்பட்டு மாவட்டத்திற்குள் மட்டுமே இ-பாஸ் இன்றி பயணம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. ஏற்கனவே கடந்த 1-ந் தேதி முதல் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கிய நிலையில் கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 550 பஸ்களில் நேற்று சுமார் 20 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன.

மண்டல முறை ரத்து செய்யப்பட்டதால் நேற்று மாவட்டத்திற்குள் மட்டுமே பஸ் போக்குவரத்து இயக்கப்பட்டது. அதாவது கடலூரில் இருந்து சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம், வடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டும் இயக்கப்பட்டது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அதில் குறைந்தளவே பயணிகள் பயணித்தனர். பெரும்பாலான பொதுமக்கள் பஸ்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டவில்லை.

மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்பதால் அதனை தீவிரமாக கண்காணிக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதிகள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டு அங்கு பேரிகார்டுகள் மற்றும் மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதிகளான சின்னகங்கணாங்குப்பத்தில் நேற்று காலை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களில் இ-பாஸ் பெற்று வருகின்றனவா? என சோதனை செய்தனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் இருந்து இ-பாஸ் இன்றி வெளியூர் செல்ல முயன்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் வெளியூர்களில் இருந்து கடலூர் மாவட்டத்துக்குள் நுழைய முயன்ற வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன.

இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் கூட திருப்பி அனுப்பப்பட்டனர். அதேநேரத்தில் திருமணம், மருத்துவம், இறப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்காக இ-பாஸ் அனுமதி பெற்று வந்தவர்கள் மட்டுமே செல்ல போலீசார் அனுமதித்தனர். அதுபோல் அத்தியாவசிய தேவைக்காக வரும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. இந்த தீவிர கட்டுப்பாடுகளால் மக்கள் கூட்டம் சற்று குறைந்து முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன.

Similar News