செய்திகள்
ராஜசேகர்

மாமியார்-மகனுடன் சேர்ந்து கணவரை கொன்ற ஆசிரியை

Published On 2020-06-25 12:01 IST   |   Update On 2020-06-25 12:01:00 IST
மது அருந்த பணம் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்ததால் கை, கால்களை கட்டி காதுகளில் விஷம் ஊற்றி மாமியார்- மகனுடன் சேர்ந்து கணவரை ஆசிரியை கொலை செய்தார். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளியை சேர்ந்தவர் சேகர் என்கிற ராஜசேகர்(வயது 47). டிரைவரான இவருக்கு திருமணமாகி சுகுணா (37) என்ற மனைவியும், ரவிவர்மன் (19), ராகேஷ்வர்மன் என்ற 2 மகன்கள் உள்ளனர். மனைவி சுகுணா பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ரவிவர்மன் ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். ராகேஷ்வர்மன் ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

ராஜசேகரின் தந்தை முருகேசன் வருமான வரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று இறந்துவிட்டார். ராஜசேகரின் தாய் செல்வி (65) கணவர் முருகேசனுக்கு வரும் ஓய்வூதியத்தை கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார்.

ராஜசேகர் தினமும் மது குடிப்பதற்காக தாய் மற்றும் மனைவியிடம் பணம் கேட்டு அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. சில நேரங்களில் வீட்டிலுள்ள பொருட்களை எடுத்து சென்று விற்பனை செய்து குடித்து வந்து ஊர் பொதுமக்களிடம் தகராறு செய்தும் வந்துள்ளார். இந்நிலையில் ராஜசேகர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடிபோதையில் தாமாகவே வீட்டினுள் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான செல்வியும், சுகுணாவும் ரவிவர்மனிடம் கூறி அழுதுள்ளனர். இதனால் மூவரும் சேர்ந்து ராஜசேகரை கொலை செய்ய முடிவு எடுத்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு மூவரும் சேர்ந்து ராஜசேகரை கட்டிப்போட்டு, வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) அவரது வாய் மற்றும் காதுகளில் ஊற்றி கொலை செய்தனர். இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ராஜசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், ராஜசேகரை அவரது மகன் ரவிவர்மன் கை, கால்களை கட்டியதாகவும், மனைவி சுகுணா வாயிலும், காதிலும் பூச்சி மருந்தை (விஷம்) ஊற்றியதாகவும், மீதமுள்ள மருந்தை தாய் செல்வி வாங்கி வாய் மற்றும் காதுகளில் ஊற்றி கொலை செய்ததது தெரியவந்தது. இதையடுத்து செல்வி, சுகுணா, ரவிவர்மன் ஆகிய 3 மீதும் போலீசார் வழக்குப்பதிந்து, அவர்களை கைது செய்தனர்.

Similar News