செய்திகள்
கடலூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

கடலூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா

Published On 2020-06-23 12:54 IST   |   Update On 2020-06-23 12:54:00 IST
நடுவீரப்பட்டில் சாலைப்பணியை தொடங்க கோரி கடலூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
கடலூர்:

கடலூர் அருகே நடுவீரப்பட்டு ஊரராட்சிக்குட்பட்ட சாலக்கரை வீதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி குட்டை போல் காட்சி அளித்தது. இதையடுத்து அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.

இதை பரிசீலனை செய்த ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷம் ஆறுமுகம், அந்த சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார். அதன்படி அரசு உத்தரவின் பேரில் அளவீடு செய்து சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

ஆனால் 2 பேர் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்று கூறி சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி விட்டனர். இதன் காரணமாக சாலைப்பணியை முடிக்க முடியவில்லை.

இது பற்றி அப்பகுதி மக்கள் கடலூர் தாலுகா அலுவலகத்தில் புகார் செய்தனர். ஆனால் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் கடலூர் தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிறுத்தப்பட்ட சாலைப்பணியை உடனே தொடங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்களை தாசில்தார் செல்வக்குமார் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தை நடத்தி, அதற்கு உரிய தீர்வு காணப்படும் என்றார். இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News