செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட கார், மொபட்டையும், கைது செய்யப்பட்டவர்களையும் (கீழே அமர்ந்திருப்பவர்கள்) படத்தில் காணலா

சாராயம் கடத்தி வந்த அண்ணன்-தம்பி கைது

Published On 2020-06-17 09:45 GMT   |   Update On 2020-06-17 09:45 GMT
காரைக்காலில் இருந்து மயிலாடுதுறைக்கு சாராயம் கடத்தி வந்த அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 1,000 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், மொபட் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குத்தாலம்:

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு காரில் சாராயம் கடத்தி வரப்படுவதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் மேற்பார்வையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பாபுராஜ் தலைமையிலான போலீசார், மயிலாடுதுறை ரெயிலடி அருகே மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும் வகையில் மொபட்டில் வந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் மொபட்டின் பின்னால் வந்த காரையும் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் சாக்கு மூட்டைகள் இருந்தது. அதை எடுத்து பிரித்து பார்த்தபோது அதில் 1,000 லிட்டர் சாராயம் இருந்தது தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து மொபட்டில் வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், செம்பனார்கோவில் அருகே உள்ள முடிகண்டநல்லூர் ராஜபாளையம் தெருவை சேர்ந்த பாஸ்கர் மகன் பாபுகண்ணன்(வயது 27) என்பதும், சாராயம் கடத்தி வந்த காரை ஓட்டி வந்தது இவரது தம்பி சந்திரன்(21) என்பதும் தெரிய வந்தது. சாராயம் கடத்தி வந்த காருக்கு முன்னால் பாபுகண்ணன் மொபட்டில் சென்று போலீசார் யாரும் வருகிறார்களா? என பார்த்து வந்தது தெரிய வந்தது.

அண்ணன்-தம்பிகளான இவர்கள் இருவரும் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை கடத்தி மயிலாடுதுறை ரெயிலடி தூக்கணாம் குளம் பகுதியில் உள்ள ஒரு சாராய வியாபாரிக்கு கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபு கண்ணன், சந்திரன் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 1000 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய மொபட், கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News