செய்திகள்
அனீஸ் பாத்திமா

ஒடிசாவில் பயிற்சியின்போது விமான விபத்தில் சிக்கி சென்னை பெண் விமானி பலி

Published On 2020-06-09 07:34 IST   |   Update On 2020-06-09 07:34:00 IST
ஒடிசாவில் பயிற்சியின்போது ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி சென்னையைச் சேர்ந்த பயிற்சி விமானி பரிதாபமாக இறந்தார்.
தாம்பரம்:

ஒடிசா மாநிலம் பிர்சாலாவில் அரசு விமான பயிற்சி கல்வி நிறுவனம் உள்ளது. இங்குள்ள தளத்தில் தினமும் பயிற்சி வகுப்புகள் நடப்பது வழக்கம். நேற்று காலை வழக்கம்போல் சிறிய ரக விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன.

அப்போது திடீரென எதிர்பாராதவிதமாக ஒரு விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விமானத்தில் இருந்த விமானி மற்றும் பயிற்சி விமானி ஆகிய இருவருமே விபத்தில் பரிதாபமாக இறந்தனர்.

முதல்கட்ட விசாரணையில் உயிரிழந்த பயிற்சி விமானி தமிழகத்தைச் சேர்ந்த அனீஸ் பாத்திமா (வயது 20) என்று தெரிய வந்தது. விமான விபத்து தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.

பயிற்சியின் போது ஏற்பட்ட விமான விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த அனீஸ் பாத்திமா, சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் விமான நகரைச் சேர்ந்தவர் ஆவார். இவர், தாம்பரம் பகுதியில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய முகமது கோரியின் மகள் ஆவார்.

உயிரிழந்த விமானிகளில் அனீஸ் பாத்திமாவின் உடல் சென்னை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அவருடைய சகோதரர் அனுப், ஒடிசா சென்று உள்ளார்.

Similar News