செய்திகள்
மலர் மாடத்தில் பூத்துக்குலுங்கும் மலர்களை டாக்டர்கள், செவிலியர்கள் கண்டு ரசித்த காட்சி.

நீலகிரி மாவட்டத்தில் டாக்டர்கள், செவிலியர்கள் கவுரவிப்பு

Published On 2020-05-12 10:09 IST   |   Update On 2020-05-12 10:09:00 IST
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் டாக்டர்கள், செவிலியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 14 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 5 பேர், கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர் வசித்து வந்த பகுதிகளில் வீடு, வீடாக டாக்டர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் சென்று யாருக்காவது காய்ச்சல் உள்ளதா? என்று ஆய்வு நடத்தினர்.

இதுபோன்று கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இரவு, பகல் பாராமல் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்து வரும் டாக்டர்கள், செவிலியர்களை கவுரவிக்க வேண்டும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

அதன்படி ஊட்டியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள், செவிலியர்கள் அரசு தாவரவியல் பூங்காவுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை நுழைவுவாயிலில் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதா கிருஷ்ணன் தலைமையில் பணியாளர்கள் கைதட்டி வரவேற்றனர். மேலும் அவர்களது சேவையை பாராட்டி மலர்களை வழங்கி கவுரவித்தனர். பின்னர் அவர்கள் மலர் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்ட பூந்தொட்டிகளில் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் மலர்களை கண்டு ரசித்தனர்.

மேலும் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய மலர்களை பார்வையிட்டனர். அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் இருந்தனர். முடிவில் அவர்களுக்கு டீ வழங்கப்பட்டது. இதன்காரணமாக மன அழுத்தம் நீங்கியதாக டாக்டர்கள், செவிலியர்கள் தெரிவித்தனர்.

Similar News