பொதுமக்கள் திடீர் சாலை மறியல்- சீல் வைக்கப்பட்ட பகுதியை திறந்து விட கோரிக்கை
பாகூர்:
அரியாங்குப்பம் சொர்ணாநகர் பகுதியை சேர்ந்த 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து நோய் பரவாமல் தடுக்க சொர்ணாநகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை போலீசார் சீல் வைத்தனர்.
மேலும் கொரோனா தொற்று உடைய 3 பேரும் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் குணம் அடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் சொர்ணாநகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. அதுபோல் அப்பகுதியில் வசிப்போரையும் வெளியே விடவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டிலேயே முடங்கி பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதற்கிடையே முத்தியால்பேட்டை, திருவாண்டர் கோவில், ரெட்டியார்பாளையம் உள்ளிட்ட சீல் வைக்கப்பட்ட பகுதிகளை போலீசார் தளர்வு ஏற்படுத்திய நிலையில் சொர்ணாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மட்டும் தொடர்ந்து அதேநிலை நீடித்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர்.
இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ.வான ஜெயமூர்த்தியிடம் முறையிட்டனர். அவர் இதுபற்றி முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் தெரிவித்தார். நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் நாராயணசாமி அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து மத்திய அரசிடம் முறையிட்டு வழிகளை திறந்து விட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இந்த நிலையில் சீல் வைக்கப்பட்டுள்ள பகுதிகளை திறந்து விடக்கோரி அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை அரியாங்குப்பம் 3 முனை சந்திப்பில் சமூக இடைவெளியை கடை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.