செய்திகள்
மரணம்

ஊரடங்கை மீறி சுற்றுலா- பாறையில் இருந்து ஆற்றுக்குள் விழுந்து கல்லூரி மாணவர் பலி

Published On 2020-04-29 08:06 GMT   |   Update On 2020-04-29 08:06 GMT
குன்னூர் அருகே செல்பி எடுக்க முயன்ற போது பாறையில் இருந்து ஆற்றுக்குள் விழுந்து கல்லூரி மாணவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பர்லியார் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவர் அந்த பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

இவரது மகன் அகில்(வயது19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா வைரஸ் நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து அவர் தனது சொந்த ஊருக்கு சென்றார்.

ஊரடங்கு விடுமுறையால் வீட்டில் இருந்த அவர் தனது தம்பி மற்றும் உறவினர்களுடன் குன்னூர் அருகே மரப்பாலத்திற்கு செல்ல முடிவு செய்தார்.

அதன்படி நேற்று காலை தனது தம்பி மற்றும் உறவினர்களான 3 பெண்களுடன் அகில் மோட்டார் சைக்கிள் மூலமாக மரப்பாலத்திற்கு சென்றார்.

அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், விலங்குகள் நடமாட்டம் அதிகம் என்பதாலும் பொதுமக்கள் அங்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. ஆனால் அதனையும் மீறி அகில் உள்பட 5 பேரும் அங்கு சென்றனர். அவர்கள் அந்த பகுதியை சுற்றி பார்த்து வனத்தின் இயற்கை அழகை ரசித்தனர்.

மேலும் அனைவரும் சேர்ந்து செல்பி எடுத்து கொண்டனர். தொடர்ந்து அங்கிருந்த தொங்கு பாலத்திற்கு சென்று அங்கு சிறிது நேரம் சுற்றி பார்த்தனர். தொங்கு பாலத்தில் நின்று அதன் கீழே சென்ற ஆற்றை பார்த்து ரசித்தனர். பின்னர் அகில் அந்த பகுதியில் இருந்த பாறைக்கு சென்று தனது மொபைல் மூலம் செல்பி எடுத்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அகில் கால் இடறி பாறையில் இருந்து ஆற்றுக்குள் விழுந்தார். இதை பார்த்த அவருடன் வந்தவர்கள் சத்தம் போட்டனர். இதற்கிடையே ஆற்றுக்குள் விழுந்த அகில் அங்குள்ள சுழலில் சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து அகிலின் தம்பி வெலிங்டன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் குன்னூர் தீயணைப்பு அலுவலர் மோகன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினரும் போலீசாருடன் இணைந்து வாலிபரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News