செய்திகள்
கூடலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் இருசக்கர வாகனத்துக்கு அடையாள குறியிட்ட போலீசார்.

அடிக்கடி வெளியே சுற்றுபவர்களை கண்டறிய வாகனங்களுக்கு அடையாள குறியீடு- போலீசார் நடவடிக்கை

Published On 2020-04-15 12:00 IST   |   Update On 2020-04-15 11:25:00 IST
கூடலூரில் அடிக்கடி வெளியே சுற்றுபவர்களை கண்டறிய வாகனங்களுக்கு அடையாள குறியீட்டு போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
கூடலூர்:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனினும் நீலகிரி மாவட்டம் கூடலூரில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வாகன போக்குவரத்து அதிகளவில் காணப்படுகிறது. கூடலூரில் மைசூரு, கேரளா, ஊட்டி செல்லும் சாலைகளில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டும் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தாலும், அத்தியாவசிய தேவைகளுக்காக செல்வதாக கூறுகின்றனர். இதனால் போலீசார் செய்தவதறியாது தவித்தனர்.

இந்த நிலையில் ஊரடங்கை மீறி அடிக்கடி வெளியே சுற்றுபவர்களை கண்டறிய போலீசார் முடிவு செய்தனர். அதன்பேரில் கூடலூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் வந்த வாகனங்களுக்கு, துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெய்சிங் தலைமையிலான போலீசாருடன் இணைந்து ஆர்.டி.ஓ. ராஜ்குமார் மஞ்சள் நிற வர்ணம் கொண்டு அடையாள குறியிட்டனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

அத்தியாவசிய பொருட்கள் வாங்க வர வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். தினமும் வேறு, வேறு வர்ணங்கள் கொண்டு குறியிடப்படும். இன்று(அதாவது நேற்று) மஞ்சள் நிற வர்ணம் கொண்டு குறியிடப்பட்ட வாகனங்கள் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை தான் இயக்கப்பட வேண்டும். இதை மீறி இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். மேலும் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Similar News