செய்திகள்
யானை மிதித்து இறந்த பொன்னுசாமி.

அம்மாபேட்டை அருகே நள்ளிரவில் விவசாயியை யானை மிதித்து கொன்றது

Published On 2020-03-12 10:08 IST   |   Update On 2020-03-12 10:08:00 IST
அம்மாபேட்டை அருகே நள்ளிரவில் மனைவி கண்முன்னே விவசாயியை யானை மிதித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகேயுள்ள சென்னம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட முரளி அடுத்துள்ள கோணபுளியந்தோட்டத்தை சேர்ந்தவர் செல்வம் (எ) பொன்னுசாமி (46) விவசாயி.

இவருக்கு திருமணம் ஆகி ஜஸ்வர்யா (28) என்ற மனைவியும் சுஜீத்( 7) என்ற மகனும் உள்ளனர்.

வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் கணவன் மனைவி இருவரும் 4 ஏக்கர் விவசாய நிலத்தில் சொந்தமாக விவசாயம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் போது நள்ளிரவில் பக்கத்து தோட்டப்பகுதியில் இருந்து யானை, யானை என சத்தம் போட்டு உள்ளனர். அதனை கேட்ட பொன்னுசாமி எழுந்துள்ளார்.

பொன்னுசாமி எழுந்தவுடன் அவர் மனைவியும் எழுந்து உள்ளார். பொன்னுசாமி வீட்டை விட்டு வெளியே வந்து வாசற்படியில் நின்று பார்த்துள்ளார் .

அப்போது திடீரென அங்குவந்த யானை பொன்னுசாமியை கீழே தள்ளி நெஞ்சு பகுதியில் மிதித்ததில் அவர் துடிதுடித்து மனைவியின் கண்முன்னே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்ததும் ஊர்மக்கள் ஒன்று கூடினர்.

ஐஸ்வர்யா தனது கணவனின் உடலை தனது மடியில் வைத்து அழுது கொண்டிந்தார். அப்போது மீண்டும் அங்கு யானை வந்தது. அதனை பார்த்த மற்றவர்கள் ஓடிவிட்டனர்.

ஆனால் ஜஸ்வர்யா தனது கணவரை மடியில் வைத்து அழுது கொண்டிருந்ததார். அப்போது யானை பொன்னுசாமியின் கால் பகுதியை தனது தும்பிக்கையால் தட்டிப்பார்த்து விட்டு ஜஸ்வர்யாவை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டது.

யானை சென்று விட்டதை அறிந்து அப்பகுதி மக்கள் மீண்டும் வீட்டின் முன்னால் கூட தொடங்கினர். அதனையடுத்து இது குறித்து சென்னம்பட்டி வனத்துறை அலுவலருக்கு தகவல் தந்தனர். விரைந்துவந்த அவர் பார்வையிட்டு வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொன்னுசாமியின் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏற்கனவே இப்பகுதியில் யானை மிதித்து மூன்று பேர் இறந்து உள்ளனர். மேலும் வனவிலங்குகள் அடிக்கடி விவசாய நிலங்களை நாசம் செய்தும் விவசாயிகளை கொன்றும் விடுவதால் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க அரசு முன்வரவேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News