செய்திகள்
வைகை செல்வன்

எம்.பி. பதவி தருவதாக தேமுதிகவுடன் உடன்படிக்கை செய்யவில்லை- வைகை செல்வன்

Published On 2020-02-29 15:05 IST   |   Update On 2020-02-29 15:05:00 IST
மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக தே.மு.தி.க.வுடன் எந்த உடன்படிக்கையும் செய்து கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்தார்.
பழனி:

பழனியில் அ.தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வைகை செல்வன் கலந்துகொண்டு பேசினார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக கூறி 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை எந்தவிதமான தெளிவான விளக்கங்களையும் அவர் சொல்லவில்லை. அவரது கருத்துக்கள் சில சமயங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், பல சமயங்களில் நிராகரிக்கப்படக்கூடியதாகவும் மற்றும் கேலிக்கூத்தாகவும் இருக்கிறது.



பாராளுமன்ற தேர்தல் பேச்சுவார்த்தையின்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக எந்தவிதமான உடன்படிக்கையும் தே.மு.தி.க.வுடன் செய்து கொள்ளவில்லை. பா.ம.க.வுடன் மட்டுமே உடன்படிக்கை செய்யப்பட்டது.

தற்போது தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்கின்றனர். அ.தி.மு.க.விலேயே மூத்த உறுப்பினர்கள் பலர் உள்ளனர். எனவே இது தொடர்பாக இறுதி முடிவை கட்சி தலைமைதான் எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News