செய்திகள்
பலியான நாயின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட 5 குட்டிகள்

விபத்தில் சிக்கி இறந்த நாயின் வயிற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட 5 குட்டிகள்

Published On 2020-02-19 08:03 GMT   |   Update On 2020-02-19 08:03 GMT
வேலூரில் விபத்தில் சிக்கி இறந்த நாயின் வயிற்றில் இருந்து 5 குட்டிகளை கால்நடை டாக்டர் அவசர அறுவை சிகிச்சை மூலம் உயிருடன் மீட்டார்.
வேலூர்:

வேலூர் மக்கான் சிக்னல் அருகே நேற்று முன்தினம் காலை தெருநாய் ஒன்று சாலையை கடக்க முயன்றது.

அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் நாயின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் காயமடைந்த நாய், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியது.

அப்போது அவ்வழியாக வந்த வேலூர் சலவன்பேட்டையை சேர்ந்த தண்டபாணி என்பவர் அந்த நாயை அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்ல முயன்றார்.

இந்த கருணையை பார்த்து அங்கிருந்தவர்கள் உதவி செய்ய தொடங்கினர். நாயை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு கால்நடை டாக்டர் ரவிசங்கர் பணியில் இருந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நாய்க்கு, குளுக்கோஸ் ஏற்றி முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் அந்த நாய் பரிதாபமாக பலியானது.



இந்நிலையில் பலியான பெண் நாயின் வயிற்றில் குட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதனால் கால்நடை டாக்டர் ரவிசங்கர் அவசர அறுவை சிகிச்சை மூலம் நாயின் வயிற்றில் இருந்த 5 குட்டிகளை உயிருடன் மீட்டார்.

மேலும் அருகிலுள்ள மருந்து கடையில் இருந்து குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பாட்டில் வாங்கி வந்து நாய் குட்டிகளுக்கு பால் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து சலவன்பேட்டையை சேர்ந்த தண்டபாணி அந்த 5 குட்டிகளையும் கொண்டு சென்று வீட்டில் பராமரித்து வருகிறார்.

இதுகுறித்து கால்நடை டாக்டர் ரவிசங்கர் கூறுகையில்:-

நாய் பலியான ஒரு சில நிமிடங்களில் வயிற்றில் இருந்த குட்டிகளும் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்துவிடும்.

ஆனால் 5 நிமிடத்தில் அறுவை சிகிச்சை மூலம் குட்டிகள் உயிருடன் வெளியே எடுக்கப்பட்டு விட்டது. தற்போது நாய்க்குட்டிகள் நலமாக இருக்கின்றன.

தெருநாய் தானே என்று அலட்சியமாக விட்டு செல்லாமல், அவ்வழியாக சென்றவர் மீட்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது.

அவரின் நல்ல உள்ளத்துக்காக நானும் என்னுடைய கடமையை செய்துவிட்டேன். இந்த சம்பவம் இதுவரை நான் கால்நடைகளுக்கு செய்த அறுவை சிகிச்சையில் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது என்றார்.


Tags:    

Similar News