செய்திகள்
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்- பெண்கள் உள்பட 17 பேர் கைது
வாலாஜா அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாலாஜா:
வாலாஜா அடுத்த வன்னிவேடு தென்றல் நகர், காந்தி நகர் பகுதியில் ஏற்கனவே 3 டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.
இந்நிலையில் வன்னிவேடு அருகில் உள்ள ரபி நகரில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் 15 நாட்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது டாஸ்மாக் துணை மேலாளர் மற்றும் டாஸ்மாக் அலுவலக பணியாளர் தாசில்தார் பாலாஜி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற 15 நாட்களுக்கு கால அவகாசம் கேட்டனர்.
அதன் பேரில் 15 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் நேற்று அப்பகுதி மக்கள் மீண்டும் கடையை அகற்ற வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேசமயம் மது பிரியர்களும் கடையை அகற்றக் கூடாது டாஸ்மாக் கடை இங்கேயே இருக்க வேண்டும் என போட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் துணை மேலாளர் கண்ணப்பன், வாலாஜா இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் விரைந்து வந்து அரசு டாஸ்மாக் கடை அகற்ற வேண்டும் என ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 17 பேரை கைது செய்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.