ஜோலார்பேட்டை அருகே ஏசி வெடித்து போலீஸ்காரர், மனைவி படுகாயம்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டியை சேர்ந்தவர் சண்முகம் (34). இவர் செங்கல்பட்டில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாக வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி வெற்றிசெல்வி (28). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். நேற்றிரவு ஏசியை ஆன் செய்துவிட்டு கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கினர். மகள் அறைக்கு வெளியே தூங்கினார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு அதிக சத்தத்துடன் ஏசி வெடித்தது. சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது கணவன் மனைவி இருவரும் படுகாயம் அடைந்து இருந்தனர். அவர்களை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். ஏசியில் ஏற்பட்ட கியாஸ் கசிவு காரணமாக விபத்து நடந்தது தெரியவந்தது.