செய்திகள்
ஜிகே மணி

தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்- ஜி.கே.மணி

Published On 2020-02-08 05:22 GMT   |   Update On 2020-02-08 05:22 GMT
தமிழகத்தில், 69 சதவீத இடஒதுக்கீடு காக்க ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு:

ஈரோட்டில் பா.ம.க தலைவர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

தமிழகத்தில் பாசன, நீர் மேலாண்மை திட்டத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என, தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். அத்திக்கடவு -அவினாசி திட்டத்துக்காக, டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபயணம், போராட்டம் நடத்தப்பட்டது.

தற்போது முதல்வரால் அறிவிக்கப்பட்டு, விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது. எவ்வளவு விவசாயிகள் பயன்பெறுவர் என கூறினோமோ, அந்த அளவு பயன்பெறும் வகையில், திட்டம் வகுக்கப்படுகிறது.

சிறுவாணி அருகே கேரளா அரசு தடுப்பணை கட்டுவதால், தமிழகம் பாதிக்காதவாறு, கேரளா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு, கோவை, கரூர், திருப்பூர், சேலம், நாமக்கல் மாவட்டங்கள், ஜவுளி, பின்னலாடை, நெசவு, மின்மோட்டார் தொழில்கள் கடுமையாக பாதிக்கிறது. இம்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு அரசு தேவையான முயற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக, வேளாண் உற்பத்திக்கான தொழிற்சாலை அமைத்தால், வேளாண் துறையும் சிறக்கும்.

தமிழக அரசு, 5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது. நாங்கள் வைத்த கோரிக்கையால், இந்த ரத்து உத்தரவு வந்துள்ளது.

இடஒதுக்கீட்டின் அளவை, ஜாதி வாரி கணக்கெடுப்பு தான் நிர்ணயிக்கும். தமிழகத்தில், 69 சதவீத இடஒதுக்கீடு காக்க ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். விரைவில் நடக்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புடன், இதனையும் நடத்த வேண்டும்.

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை எந்த அடிப்படையில் நடந்தது என தெரியாது. இது, தேசிய அளவில் பல இடங்களில் நடத்தப்படுகிறது. அதுபோலத்தான் இதுவும் ஒன்று.

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய, தொடர்ந்து வலியுறுத்துகிறோம். மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் கூறுகிறது. தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மத்திய அரசு கனிவாகவே நடந்து கொள்கிறது. எனவே, கவர்னர் தான் முடிவை விரைவில் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News