குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ரஜினி ஆதரவு- ஈரோடு பாரதிய ஜனதா வரவேற்பு
ஈரோடு:
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து உள்ளார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் வந்து கொண்டே இருக்கிறது.
இது குறித்து ஈரோடு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது ரஜினியின் கருத்தை வரவேற்று உள்ளனர். துணிச்சலான முடிவு எனவும் புகழ்ந்து உள்ளனர்.
ஈரோடு மாவட்ட பா.ஜனதா தலைவர் சிவசுப்பிரமணியம் கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து யார் வேண்டுமானாலும் பேசுவதற்கு இந்த நாட்டில் உரிமை உள்ளது. இவர் தான் பேசவேண்டும் இவர் பேசக் கூடாது என்பதெல்லாம் கூற வேண்டியதில்லை.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்த சட்டத்தை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு ஞானம் பெற்று ரஜினிகாந்த் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார். சிலர் சட்டத்தை படிக்காமல் பேசிக் கொண்டு இருக்கின்றனர். ரஜினிகாந்த் கூறியுள்ள தெளிவான கருத்தை நாம் வரவேற்கத்தான் வேண்டும்.
பா.ஜ.க. மாநில சட்டத் துறை அமைப்பாளர் ஈரோடு பழனிசாமி கூறியதாவது:-
எந்த நாடாக இருந்தாலும் குடியுரிமைச் சட்டம் என்பது அவசியம் இந்த சட்டத்தால் இந்தியாவில் யாரும் பாதிக்கபடப்போவது இல்லை. இந்தக் கருத்தைத்தான் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இந்தக் கருத்தை இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்து போல் அரசியல் கட்சிகள் சித்தரித்து வருகின்றன. இந்த சட்டத்தால் இந்தியாவிலுள்ள எந்த மதத்தினரும் பாதிக்கப்படப் போவது இல்லை என ரஜினிகாந்த் கூறிய கருத்தில் எந்தவித தப்பும் இல்லை அவர் கூறிய கருத்து மிகச் சரியான தெளிவான கருத்து வரவேற்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.