திருப்பத்தூரில் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் கச்சேரி தெருவை சேர்ந்தவர் ரித்திக்ஷா ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மனைவி கயல்விழி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
தம்பதியின் மகன்கள் வீரம், கவுரவ்ஷா (வயது 6). இரண்டாவது மகன் கவுரவ்ஷா அங்குள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். நேற்று காய்ச்சலின் தீவிரம் அதிகமானது.
இதனையடுத்து வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவுரவ்ஷா இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மர்ம காய்ச்சல் அந்த பகுதியில் பரவுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பலியானவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. பொது மக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும் என அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.