செய்திகள்
மதுப்பிரியர் ஒருவர் பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் தலைவைத்து படுத்திருந்தபோது எடுத்த படம்

குடிபோதையில் பஸ் சக்கரத்தில் தலை வைத்து படுத்திருந்தவரால் பரபரப்பு

Published On 2019-11-25 10:00 IST   |   Update On 2019-11-25 10:00:00 IST
அறந்தாங்கி பஸ் நிலையத்தில் குடிபோதையில் பஸ் சக்கரத்தில் தலை வைத்து படுத்திருந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.
அறந்தாங்கி:

அறந்தாங்கி பஸ் நிலையத்தில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் மதுப்பிரியர் ஒருவர் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டார். பின்னர் அவர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த ஒரு அரசு பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் தலையை வைத்து தூங்கிவிட்டார். பஸ் புறப்படும் நேரம் வந்துவிட்டதால், பஸ்சை இயக்க வேண்டும் பஸ் டிரைவர் முயன்றார். அப்போது பஸ் சக்கரத்தில் ஒருவர் தலைவைத்து படுத்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே பஸ்சில் இருந்து கீழே இறங்கி, அவரை எழுப்ப முயன்றார்.

ஆனால் அவர் மதுபோதையில் தன்னை அறியாமல் டிரைவரிடம் தகராறு செய்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் இதுகுறித்து அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதுப்பிரியரை பிடித்து விசாரணை நடத்தி அப்புறப்படுத்தினர். பின்னர் பஸ் டிரைவர் பஸ்சை எடுக்க முயன்றபோது, போலீசாரை மீறி திடீரென அந்த மதுப்பிரியர் ஓடி வந்து பஸ் சக்கரத்தின் கீழ் தனது கையை வைத்துக்கொண்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பஸ் புறப்பட தாமதம் ஆனதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், இதுபோல் மதுகுடித்துவிட்டு பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்கும் நபர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அறந்தாங்கி போலீசார் அவ்வப்போது பஸ் நிலைய பகுதியில் ரோந்து சென்று பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அறந்தாங்கி பஸ் நிலையத்தில் மதுபோதையில் படுத்திருக்கும் மதுப்பிரியர்கள் தாங்கள் அணிந்திருக்கும் உடைகள் கலைந்திருப்பது கூட தெரியாமல் படுத்திருப்பதால் பெண்கள், சிறுமிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பஸ் சக்கரத்தில் தலையை வைத்து படுத்திருந்தவரை டிரைவர் கவனிக்காமல் பஸ்சை எடுத்து இருந்தால் உயிர்பலி ஏற்பட்டு இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Similar News