செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளி மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் பயிற்சி அளிக்க 500 ஆடிட்டர்கள் - அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2019-11-25 09:51 IST   |   Update On 2019-11-25 09:51:00 IST
அரசு பள்ளி மாணவர்களுக்கு பட்டயக்கணக்காளர் பயிற்சி அளிக்க 500 ஆடிட்டர்கள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கோபி:

ஈரோடு மாவட்டம் கோபி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காசியூர் அலிங்கியம் பூசாரியூர் கோட்டுப் புள்ளாம்பாளையம் ஆகிய பகுதிகளில் நியாய விலைக்கடை திறப்பு சாலைப்பணிகள் குடிநீர் மேல்நிலைத்தொட்டி உட்பட ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

அதனை தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சீன அதிபர் பிரதமர் மோடி சந்திப்பின்போது நமது அரசின் செயல்பாடுகளை பார்த்து வியந்து போய் இரு தலைவர்களும் பாராட்டு கடிதங்கள் எழுதும் அளவிற்கு நமது தமிழ் மண் விளங்கியுள்ளது.

குடிமராமத்து பணிகள் மூலம் ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என நமது முதல்வர் அறிவித்த திட்டத்தை இந்தியா முழுவதும் செயல்படுத்தி வருகிறார்கள். அரசு பள்ளி மாணவர்களுக்கு பட்டயக்கணக்காளர் பயிற்சி அளிக்க 500 ஆடிட்டர்கள் தயார் நிலையில் உள்ளனர்.



மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தொழில்கல்வியை கற்றுத்தரவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விடுமுறை நாட்களில் அருகில் உள்ள தொழிற்சாலைகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

தனியார் பள்ளிகளில் தனியாக கட்டணம் வசூலித்துக்கொண்டு நீச்சல் பயிற்சி கற்றுக்கொடுக்கின்றனர். நமது அரசை பொறுத்தவரை தற்காப்பு கலை கற்றுத்தருவதற்கும் சாலை பாதுகாப்பு குறித்தும் கற்றுத்தரவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாணவர்கள் அறிவுரைகளை கேட்டு நடக்கவேண்டும். நீச்சல் தெரியாதவர்கள் எவ்வாறு தண்ணீரில் விளையாடுவது என்று பயிற்சி அளிக்கலாம். அந்த காலத்தில் பெற்றோர்கள் கிணற்றில் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுத்தனர் அவையெல்லாம் மறைந்து போயியுள்ளன. பெற்றோர்கள் ஒத்துழைத்தால் அப்பணிகள் நிறைவேறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News