செய்திகள்
திருமாவளவன் எம்.பி. தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு ஏற்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2019-10-01 10:28 GMT   |   Update On 2019-10-01 10:28 GMT
சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு ஏற்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி பேசினார்.

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் கடந்த 11-ந் தேதி சிவகாசி தொழில் அதிபரின் இல்ல திருமண விழா நடந்தது. இதையொட்டி நட்சத்திர ஓட்டல்கள் போன்று ஆயிரங்கால் மண்டபம் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இதனால் கோவில் புனிதம் கெட்டு விட்டதாக பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திருமண ஏற்பாடு செய்த பட்டு தீட்சிதர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

ஆனாலும் கோவிலை அரசுடமையாக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகிறார்கள். அதோடு சிதம்பரம் கோவிலில் நடந்த திருமணத்தை கண்டித்தும், கோவிலை அரசுடமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று காலை 11.30மணி அளவில் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆடம்பர திருமண நடத்த காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலை அரசே ஏற்று நடத்த வேண்டும்.

சிதம்பரம் நகரில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வீடுகள் அகற்றப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கோவில் நிர்வாகத்தை கண்டித்து கட்சியினர் கோ‌ஷம் எழுப்பினர். 

Tags:    

Similar News