மொடக்குறிச்சி அருகே கோவில் உண்டியலை பெயர்த்து எடுத்துச் சென்ற கொள்ளையர்கள்
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ளது கோவிந்த நாயக்கன் பாளையம். இந்த ஊரில் எல்லை மாகாளியம்மன் கோவில் உள்ளது.
நேற்று இரவு வழக்கம் போல் பூஜை வழிபாடு முடிந்து பூசாரி கோவில் கதவை பூட்டிவிட்டு சென்று விட்டார்.
இன்று காலை மீண்டும் கோவிலை திறக்க வந்த பூசாரி அதிர்ச்சி அடைந்தார். கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது கோவிலில் இருந்த உண்டியலை காணவில்லை. மர்ம ஆசாமிகள் கடப்பாறையால் நெம்பி உடைத்து பெயர்த்து உண்டியலை தூக்கி சென்று உள்ளனர்.
இது பற்றி மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கோவிலில் விசாரணை நடத்தினர்.
கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உண்டியல் கிடந்தது. கொள்ளையர்கள் உண்டியலை காட்டு பகுதிக்கு தூக்கி சென்று உள்ளே இருந்த சுமார் 1 லட்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு வெறும் உண்டியலை அப்பகுதியில் வீசிவிட்டு தப்பி சென்று உள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மொடக்குறிச்சி போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.