செய்திகள்
விழாவில் கவர்னர் சதாசிவம் பேசிய போது எடுத்தப்படம்.

கவர்னர் பதவியைவிட விவசாயம் பார்க்கத்தான் ஆர்வமாய் இருந்தேன்: கேரள கவர்னர் சதாசிவம் பேச்சு

Published On 2019-08-25 13:33 GMT   |   Update On 2019-08-25 13:33 GMT
ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி பொன்விழா நிறைவு விழா நடந்தது. விழாவில் பேசிய கேரள கவர்னர் சதாசிவம், கவர்னர் பதவியைவிட விவசாயம் பார்க்கத்தான் ஆர்வமாய் இருந்தேன் என்று கூறினார்.

ஈரோடு:

ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி பொன்விழா நிறைவு விழா நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநில கவர்னருமான சதாசிவம் கலந்து கொண்டார். நான் ஒரு சாதாரண கிராமத்தில்... சாதாரண குடும்பத்தில்.. பிறந்து வளர்ந்தவன்.

ஈரோடு மாவட்டம் சிங்கம் பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் தான் படித்தேன். கல்லூரி படிப்பை ஈரோடு சி.எம்.சி. கல்லூரியில் முடித்தேன். சட்டப்படிப்பை சிவகாசியில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்தேன்.

நாம் எவ்வளவு பெரிய பதவிக்கு சென்றாலும். நாம் வந்த வழியை திரும்பி பார்க்க வேண்டும். நான் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற முதல்நாளில் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி என்னை தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தனர். மகிழ்ச்சியாக இருந்தது.

முயற்சி செய்தால் கண்டிப்பாக பெரிய பதவிக்கு யாராலும் வர முடியும். பெண்கள் பள்ளியில் படிக்கும் போதே சமுதாயத்தில் அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனை குறித்து தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பிறகு விவசாயம் செய்ய வேண்டும் எனதான் நினைத்தேன். அது பற்றி அறிவித்தும் இருந்தேன்.

அதே சமயம் கேரள கவர்னர் பதவி வந்தது. முதலில் கவர்னர் பதவியை ஏற்க தயங்கினேன். பின்னர் என் நலம் விரும்பிகள் உங்களை போல் பலர் ஓய்வு பெற்ற பிறகு கவர்னர் ஆகி உள்ளனர். நீங்களும் பதவி ஏற்கலாம் என கூறினர். அதன்படி கேரள கவர்னர் ஆனேன். கேரளா மாநிலம் 100 சதவீத கல்வி அறிவு பெற்ற மாநிலம் ஆகும்.

மேலும் கேரளாவில் கல்வி தரத்தை உயர்த்த முயற்சி செய்து வருகிறேன்.

இவ்வாறு கேரள கவர்னர் சதாசிவம் கூறினார்.

முன்னதாக கல்லூரி அறக்கட்டளை தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். தொழிலதிபர் எஸ்.கே.எம். மயிலானந்தன் வரவேற்றார். கல்லூரி செயலாளர் எஸ்.டி.சந்திர சேகர் வாழ்த்தி பேசினார்.

கேரள கவர்னர் சதாசிவம் கல்வி ஆராய்ச்சி அருங்காட்சியகம் தற்காப்பு திரன் மேம்பாட்டு மையத்தை திறந்து வைத்து ஆசிரியர்களை அவர் கவுரவித்தார். முடிவில் கல்லூரி பொருளாளர் அருண் நன்றி கூறினார்.

Tags:    

Similar News