இளம்பெண்களை பாலியல் தொழிலில் தள்ளிய புரோக்கர்கள் 2 பேர் பிடிபட்டனர்
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரோந்தில் ஈடுபட்டு கொண்டிருந்த வீரப்பன்சத்திரம் போலீசாரிடம் சத்தி ரோடு அருகே உள்ள ஒரே வீட்டில் இரண்டு பெண்களை அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக புகார் கூறினார்.
இதைத் தொடர்ந்து வீரப்பன் சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தனர் அப்போது அந்த வீட்டில் இரண்டு பெண்கள் இருந்தனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பெண்கள் தாங்கள் வேலை தேடி வந்ததாகவும். தங்களுக்கு வேலை வாங்கித் தருவதாக இரண்டு பேர் இங்கே கூட்டி வந்து எங்களைக் கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் பரபரப்பாக புகார் கூறினர்.
இதன் பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர்கள் விஜயகுமார் (வயது 48), பிரவீன் (வயது 23) என இருவரை கைது செய்தனர். இரு பெண்களையும் போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.