செய்திகள்
கத்திகுத்து

அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கத்தியால் குத்திய வாலிபர் கைதாகிறார்

Published On 2019-08-03 09:45 GMT   |   Update On 2019-08-03 09:45 GMT
டிஎன்.பாளையம் அருகே அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கத்தியால் குத்திய வாலிபர் விரைவில் கைது செய்யப்படுகிறார்.

டிஎன்.பாளையம்:

டிஎன்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி பாரதி வீதியை சேர்ந்தவர் தேவராஜ். இவர் தனது மனைவி அன்னக்கொடி (37) மகன் மவுலிதரனுடன் வசித்து வருகிறார்.

தேவராஜின் சகோதரர் சரவணன் (39) தனது தாயுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், அன்னக்கொடியின் கொழுந்தனார் சரவணன் தன்னிடம் பாலியல் ரீதியில் தவறாக பேசி வருவதாக தனது கணவர் தேவராஜிடம் கூறினார்.

தேவராஜ் தனது தம்பி சரவணனிடம் இது குறித்து கண்டித்து திட்டியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் தேவராஜ் தனது மாமியார் வீடான கவுந்தப்பாடி வேலம்பாளையத்திற்கு மனைவி மற்றும் மகனையும் அனுப்பி வைத்தார்.

அன்னக்கொடி தனது அம்மா வீட்டிலிருந்து கொண்டே மகனை கள்ளிப் பட்டி அருகே உள்ள வரப்பள்ளம் தனியார் பள்ளிக்கு அனுப்பி வைத்து கூட்டி வந்தார்.

இதையறிந்த சரவணன் சம்பவத்தன்று மாலை வரப்பள்ளம் பஸ்டாப் அருகே காத்திருந்தார்.

பள்ளியில் இருந்து தனது மகனை வீட்டிற்கு கூட்டி செல்ல வரப்பள்ளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்த அன்னக்கொடியை சரவணன் திட்டியவாறே தான் மறைத்து வைத்திருந்து சூரிக்கத்தியால் வயிறு, மார்பு பகுதி, தோல்பட்டை, முதுகு என மாறி மாறி சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனை எதிர்பாராத அன்னக்கொடி படுகாயம் அடைந்தார்.

சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்ததை பார்த்த சரவணன் தன்னை தானே குத்திக் கொண்டு தனது பைக்கில் சென்று விட்டார்.

அருகில் இருந்தவர்கள் தேவராஜ்க்கு தகவல் கொடுத்து 108-ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவ மனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக அன்னகொடி கோவை தனியார் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரவணனும் சிகிச்சை பெற்று வருவதால் விரைவில் சரவணன் கைது செய்யப்படுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News