செய்திகள்
வேலூரில் பிரேமலதா பேசிய காட்சி. அருகில் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் அமைச்சர்கள் உள்ளனர்.

பா.ஜ.க. மந்திரிகளை சந்தித்து தி.மு.க.வினர் காரியம் சாதிக்க துடிக்கின்றனர்- பிரேமலதா

Published On 2019-08-01 05:39 GMT   |   Update On 2019-08-01 05:39 GMT
பிடிக்காது என்று கூறிவிட்டு பா.ஜ.க. மந்திரிகளை சந்தித்து தி.மு.க.வினர் காரியம் சாதிக்க துடிப்பதாக தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
வேலூர்:

வேலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா ஆம்பூர், வாணியம்பாடி, வேலூரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் தான். ரத்து செய்யப்பட்ட தேர்தல் மீண்டும் நடைபெற உள்ளது.

ஏ.சி.சண்முகம் வெற்றி பெற்றால் ஆம்பூர் தொகுதியின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒகேனக்கல் குடிநீர் கிடைக்க செய்வார். காவிரி பாலாறு நதிநீரை இணைப்பார். தொகுதிகளின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பார். நாயக்கனேரி, காமனூர் மலை கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். ஆம்பூர் பெத்லகேம் ரெயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுப்பார்.

கன்னடிகுப்பம் ரெயில்வே மேம்பாலத்தையும் அமைக்க நடவடிக்கை எடுப்பார். ஆம்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும், ரெயில் நிலையம் தரம் உயர்த்தப்படும்.

இத்தொகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, ஏழை, எளிய மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி மக்களுக்கு தேவையான உதவிகளை வேட்பாளர் ஏ.சி. சண்முகம் செய்வார்.

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு தரும் கூட்டணி அ.தி.மு.க. கூட்டணி. இஸ்லாமியர்களின் உற்ற தோழன், பாதுகாவலர்கள் என்றால் அது விஜயகாந்த் மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாதான்.

தே.மு.தி.க.வில் தான் 4 இஸ்லாமியர்களுக்கு மாவட்டச் செயலாளராக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்காக பள்ளி வாசல்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா இலவச அரிசி வழங்கினார் என்பதை யாரும் மறந்துவிடவில்லை.

சினிமாவில் நடித்தாலும், மக்கள் முன்னிலையில் நடிக்க தெரியாதவர்கள் விஜயகாந்தும், ஜெயலலிதாவும்.

பா.ஜ.க.வை பிடிக்காது என்று கூறிவிட்டு, பா.ஜ.க. மத்திய அமைச்சர்களுடன் நட்புறவு ஏற்படுத்திக் கொண்டு காரியம் சாதித்துக் கொள்ள துடித்து கொண்டிருக்கின்றனர். மத்திய அமைச்சர்களை போய் சந்திப்பவர்கள் தி.மு.க.வினர் தான். அ.தி.மு.க.வினர் செல்வதில்லை. வேலூர் தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டுமானால், ஏ.சி. சண்முகத்துக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News