செய்திகள்
கொள்ளை

திட்டக்குடி அருகே நகை கடையில் 40 பவுன்- 8 கிலோ வெள்ளி கொள்ளை

Published On 2019-07-27 04:51 GMT   |   Update On 2019-07-27 04:51 GMT
திட்டக்குடி அருகே நகை கடையின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் 8 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் திட்டக்குடி அருகே உள்ள கீழ்கல்பூண்டி பகுதியில் நகை கடை வைத்துள்ளார்.

நேற்று இரவு வியாபாரம் முடிந்து வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவில் மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர்.

அவர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் இரும்பு பெட்டகத்தை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பொருட்களை அள்ளி சென்றனர்.

இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கடை திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து கடையின் உரிமையாளர் சங்கருக்கு செல்போன் மூலம் பக்கத்து கடை உரிமையாளர்கள் தகவல் கொடுத்தனர். அதிர்ச்சி அடைந்த சங்கர் பதறியபடி கடைக்கு விரைந்து வந்தார்.

கடைக்குள் சென்று பார்த்தபோது இரும்பு பெட்டகத்தில் வைத்திருந்த 40 பவுன் நகை, 8 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து ராமநத்தம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். கொள்ளை நடந்த நகை கடையை பார்வையிட்டனர். அதோடு அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

நகை கடையில் இருந்து சிறிது தூரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சிதறி கிடந்தன. இது கொள்ளை போன நகை கடையில் உள்ளதுதான் என்று சங்கர் போலீசாரிடம் கூறினார். அதனை கைப்பற்றிய போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள்.

கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொள்ளையர்களை தீவிரமாக தேடிவருகிறார்கள்.
Tags:    

Similar News