செய்திகள்
மெட்ரோ ரெயில்

21 மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஷேர்கார் வசதி விரைவில் அறிமுகம்

Published On 2019-07-15 09:43 GMT   |   Update On 2019-07-15 09:43 GMT
சென்னையில் உள்ள 21 மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஷேர் கார் வசதி கொண்டு வர உள்ளதாக மெட்ரோ ரெயில் அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னையில் 45 கி.மீட்டர் தூரத்தில் 32 மெட்ரோ ரெயில் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ மற்றும் ஷேர் டாக்சி சேவையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.

அதன்படி எழும்பூர், டி.எம்.எஸ்., அண்ணாநகர் கிழக்கு, வடபழனி, கோயம்பேடு, ஆலந்தூர் ஆகிய 6 ரெயில் நிலையங்களில் இருந்து ஷேர் டாக்சி சேவை செயல்படுகிறது. இதே போல் கிண்டி, திருமங்கலம், ஆலந்தூர், சின்னமலை, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, பரங்கிமலை ஆகிய 7 ரெயில் நிலையங்களில் இருந்து ஷேர் ஆட்டோ சேவை செயல்படுகிறது.

ரெயில் நிலையங்களில் இருந்து 3 கி.மீட்டர் தூரம் வரை மட்டுமே இச்சேவை செயல்படுத்தப்படுகிறது. ஷேர் ஆட்டோவில் கட்டணமாக ரூ.5-ம், ஷேர் டாக்சியில் கட்டணமாக ரூ.10-ம் வசூல் செய்யப்படுகிறது. இவற்றில் கடந்த ஆண்டு ஆகஸ்டு முதல் ஜூன் வரை 3 லட்சத்து 95 ஆயிரத்து 113 பேர் பயணம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் 21 மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஆகஸ்டு 1 முதல் ஷேர் கார் வசதியை விரிவுபடுத்த மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மெட்ரோ ரெயில் நிலையங்களில் பயணம் செய்பவர்கள் ஷேர் கார் வசதியை கூடுதலாக செய்து தருமாறு கோரிக்கை வைத்திருந்தனர்.

இதன்படி 21 ரெயில் நிலையங்களில் ஷேர் கார் வசதி கொண்டு வரப்படுகிறது. இதற்காக மாருதி எக்கோ வாகனம் விடப்படுகிறது. இதில் 6 பேர் வரை பயணம் செய்யலாம். ஸ்டே‌ஷனில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரை இந்த வாகனம் சென்று வரும். கட்டணம் எவ்வளவு என்பது ஓரிரு நாளில் முடிவு செய்து அறிவிக்கப்படும்.

‘ஆப்’ செயலி மூலம் வாகனத்தை பதிவு செய்ய வேண்டும். ‘கார்டு’ மூலமும் இதற்கு பணம் செலுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News