செய்திகள்
விபத்து

ஆம்பூரில் பள்ளிக்கு ஆட்டோவில் சென்ற சிறுமி கீழே விழுந்து மரணம்

Published On 2019-07-09 11:19 GMT   |   Update On 2019-07-09 11:19 GMT
ஆம்பூரில் பள்ளிக்கு ஆட்டோவில் சென்ற சிறுமி கீழே விழுந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:

ஆம்பூர் மல்லிகை தோப்பு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. கூலி தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி. மகள் திவ்யக்கரசி (வயது 7). அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

இன்று காலை திவ்யக்கரசியை குளிக்கவைத்து, சாப்பாடு ஊட்டி, சீருடை அணிவித்து அவரது பெற்றோர் பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு கையசைத்தபடி சிறுமி புறப்பட்டு சென்றார்.

ஆட்டோவில் சீட்டின் ஓரத்தில் சிறுமி அமர்ந்துள்ளார். அங்குள்ள சாலையில் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டி மூடப்பட்டுள்ளது. மேடு, பள்ளத்தில் ஆட்டோ இறங்கி ஏறியது.

அப்போது ஆட்டோவில் இருந்த சிறுமி கீழே தவறி விழுந்தார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யக்கரசி பரிதாபமாக இறந்தார்.

சிறுமியின் பெற்றோர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இது தொடர்பாக ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் துத்திபட்டை சேர்ந்த கார்த்தி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சில ஆட்டோக்கள் அதிகளவு பள்ளி குழந்தைகளை ஏற்றி செல்கின்றனர். இதனால் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.

அதிகாரிகள் ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அதிகளவு மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோக்களை பெற்றோர்கள் புறக்கணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News