செய்திகள்

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

Published On 2019-04-30 15:38 GMT   |   Update On 2019-04-30 15:38 GMT
பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக கூலித்தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பெக்கிலி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 23). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு அந்த பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பள்ளி மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது குறித்து அப்போதைய ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயராணி வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்தார். அவர் மீது 342, 366 போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி போக்சோ பிரிவின் கீழ் 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் மேலும் ஒரு வருட சிறை தண்டனையும், பிரிவு 366-ன் கீழ் கடத்திய குற்றத்திற்காக 6 வருட சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையும், பிரிவு 342-ன் கீழ் தவறான கருத்தை தெரிவித்ததற்காக 10 மாத சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் கட்ட தவறினால் மேலும் ஒரு மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை குற்றவாளி ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டது. இதையடுத்து சந்திரசேகரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.
Tags:    

Similar News