செய்திகள்

இரட்டை பெண் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்த டாக்டர்

Published On 2019-04-28 12:21 GMT   |   Update On 2019-04-28 12:21 GMT
அரக்கோணம் அருகே டாக்டர் ஒருவர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்து வந்த அவரது இரட்டை பெண் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்துள்ளார்.
அரக்கோணம்:

வேலூர் மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியில் பழமை வாய்ந்த நகராட்சி அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை 46 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

கடந்த கல்வியாண்டில் அரக்கோணம், சுவால் பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த டாக்டர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் நகராட்சி அரசு தொடக்கப்பள்ளிக்கு கல்வி சீர்வரிசை வழங்கப்பட்டது. இதன் மூலம் பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டது.

இதையடுத்து நகராட்சி அரசு தொடக்கப்பள்ளி சார்பில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அரக்கோணத்தை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் ராவணன், தனது மகள்களான பூந்தளிர், பூந்துளிர் ஆகிய இரட்டை பெண் குழந்தைகளை நகராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் நேற்று முன்தினம் 2-ம் வகுப்பில் சேர்த்தார். அப்போது அவரது மனைவி பூங்குழலி உடனிருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

எனது இரட்டை பெண் குழந்தைகள் ஏற்கனவே அரக்கோணத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்து வந்தனர்.

இந்நிலையில் அவர்களை அங்கிருந்து மாற்றி சுவால் பேட்டை பகுதியில் உள்ள நகராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் தமிழ் வழிக்கல்வியில் 2-ம் வகுப்பில் சேர்த்துள்ளேன்.

அரசு பள்ளியில் படிப்பதன் மூலமாக மனம், அறிவு வளர்ச்சி அதிகரிக்கும். இப்பள்ளியில் எனது பிள்ளைகளை சேர்ப்பத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். என்றார்.
Tags:    

Similar News