செய்திகள்

பாராளுமன்ற தேர்தலுக்கு பின் அ.தி.மு.க. அரசு கவிழும்- டிடிவி தினகரன் பேச்சு

Published On 2019-04-03 15:55 IST   |   Update On 2019-04-03 15:55:00 IST
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. அரசு கவிழும். மீண்டும் அம்மாவின் அரசு தமிழகத்தில் பொறுப்பேற்கும் என்று டிடிவி தினகரன் பேசியுள்ளார். #ttvdinakaran #parliamentelection #tngovt

கோவை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கோவையில் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.அப்பாதுரையை ஆதரித்து பரிசு பெட்டியில் வாக்களிக்க கோரி பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா கோவில், வடவள்ளி, செல்வபுரம், உக்கடம் ஆத்துப்பாலம், போத்தனூர் நஞ்சுண்டாபுரம் ஆகிய இடங்களில் திறந்தவேனில் சென்றவாறு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் ஆட்சி எப்படி நடக்க கூடாது என்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி உதாரணம். நரேந்திர மோடியால் பாதுகாக்கப்பட்டு வரும் இந்த ஆட்சி முடிவுக்கு வருவதை, மோடியின் டாடி தடுத்தாலும் முடியாது. சட்டமன்ற இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தெருத்தெருவாக வந்து மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். அ.தி.மு.க. தொண்டர்கள் அ.ம.மு.க. பக்கம் இருக்கிறார்கள்.

ஆனால் டெண்டர் எடுப்பவர்கள் மட்டுமே எடப்பாடி பழனிசாமி பின்னால் இருக்கிறார்கள். தொண்டர்களையும், மக்களையும் நம்பி அ.ம.மு.க. தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த பாராளுமன்ற தேர்தல் கல்லா பெட்டிக்கும், பரிசு பெட்டிக்கும் இடையே நடக்கும் தேர்தல்.

அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி மதம், சாதிகளால் மக்களிடையே பிரிவினையை தூண்டும் கூட்டணி. தி.மு.க. கூட்டணி தமிழகத்தை ஏற்கனவே ஏமாற்றிய கூட்டணி. மத்திய அரசின் தவறான ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. மோடி மற்றும் எடப்பாடி பழனிசாமியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. துடியலூர், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் பெண்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளன. இதற்கு காரணம் காவல் துறையினர் முதல்-அமைச்சர் பாதுகாப்பிற்காக சென்றே சோர்ந்து போய் விட்டனர்.

மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தில் எந்த திட்டத்தையும் முறையாக செயல்படுத்தவில்லை. பல திட்டங்கள் அறிவிப்போடு நின்று விட்டன. அத்திக்கடவு -அவினாசி திட்டம் மேட்டுப்பாளையம், காரமடை கவுசிகா நதி ஆகியவற்றை இணைத்து நிறைவேற்ற வேண்டும். ஆனால் அவ்வாறு அறிவிக்கப்படவில்லை.

எங்களுக்கு குக்கர் சின்னம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். ஆனால் வேறு பொது சின்னம் தான் வழங்க கோர்ட்டு முன்வந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட சின்னங்களில் நாங்கள் பரிசு பெட்டி சின்னத்தை தேர்ந்தெடுத்தோம். பரிசு பெட்டி சின்னம் ஜெயலலிதாவின் சின்னம். ஒவ்வொரு சம்பவத்திலும் மத்திய, மாநில அரசுகள் எங்களை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்பட்டன.

ஆனால் அதையும் மீறி கடைசி நேரத்தில் பரிசு பெட்டி சின்னத்தை பெற்று தேர்தலில் போட்டியிடுகிறோம். ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். அமைத்தது மெகா கூட்டணி இல்லை. அது மோசடி கூட்டணி. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. அரசு கவிழும். மீண்டும் அம்மாவின் அரசு தமிழகத்தில் பொறுப்பேற்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவர் போத்தனூரில் பேசி முடித்ததும் இரவு 10 மணி ஆகி விட்டது. தேர்தல் விதிகளின் படி இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. எனவே டி.டி.வி. தினகரன் கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ், சிங்காநல்லூர், சூலூர் பஸ் நிலையம் வழியாக பல்லடம் சென்றடைந்தார். அப்போது அவர் பேசாமல் வேனில் இருந்தபடி கையை அசைத்தவாறு சென்றார். முன்னதாக கோவை வடவள்ளியில் ஒரு பெண் குழந்தைக்கு அம்மு என்று டி.டி.வி.தினகரன் பெயர் சூட்டினார். #ttvdinakaran #parliamentelection #tngovt

Similar News