செய்திகள்

வாக்குகளுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை உருவாக்கியது திமுக தான் - பிரேமலதா விஜயகாந்த்

Published On 2019-04-03 08:58 IST   |   Update On 2019-04-03 13:13:00 IST
வாக்குகளுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை உருவாக்கியது தி.மு.க. தான் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். #LokSabhaElections2019 #PremalathaVijayakanth
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று முன்தினம் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் இரவு அவர் கீழ்பென்னாத்தூர் சென்றார். இரவு 10.05 மணிக்கு பிரசாரம் நடைபெறும் இடமான கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையத்திற்கு சென்றதால் தேர்தல் விதிகளின் படி அவர் பேச முடியாமல் மக்களை நோக்கி கையால் சைகையை மட்டும் காண்பித்து விட்டு சென்றார்.

இதையடுத்து அவர் இரவு திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள விடுதியில் தங்கினார். தொடர்ந்து நேற்று காலை அவர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

துரைமுருகனின் வீட்டில் நடைபெற்ற சோதனை அவரை பழிவாங்கும் நடவடிக்கை என்றும், எங்களை வெற்றி பெற செய்யவிடாமல் தடுப்பதற்காக நடக்கும் சூழ்ச்சி தான் இது என்றும் துரைமுருகன் கூறி வருகிறார். அவர் எவ்வளவு பெரிய பொய்யை சொல்லி வருகிறார் என்று இன்று வெட்ட வெளிச்சமாக வெளியில் வந்து உள்ளது.

ஏனென்றால் பாதாள அறைகளிலும், சிமெண்டு குடோன்களிலும், கல்லூரிகளிலும் தோண்ட, தோண்ட குவியல்கள் மாதிரி வந்து கொண்டே இருக்கிறது. பல கோடி ரூபாய் பிடிபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தபிறகு தான் நமக்கு தெரியும். தே.மு.தி.க.வை அசிங்கப்படுத்த வேண்டும் என்று துரைமுருகன் தொடர்ந்து நடத்திய நாடகம் இன்று அவருக்கே திரும்பி வினையாக போய் முடிந்து உள்ளது.

வாக்குகளுக்கு பணம் கொடுக்கும் கலாசாரத்தை உருவாக்கியது தி.மு.க. தான். திருமங்கலம் பார்முலாவில் இருந்து ஒரு புற்றுநோய் போல தமிழகத்தில் இது பரவி விட்டது. கிடைக்கும் தகவலை வைத்து தான் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர்.

இதற்கு ஆளும் கட்சியின் சதி என்றும், மத்திய அரசின் சதி என்றும் கூறமுடியாது. சோதனை செய்வது பெரியது அல்ல. அங்கு என்ன கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். அதற்குரிய தண்டனையை பெற்று கொடுக்க வேண்டும். இந்த வருமான வரிசோதனை தி.மு.க.விற்கு ஒரு இழுக்கு.

தமிழகத்தில் தி.மு.க. எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ, அங்கெல்லாம் சோதனை நடத்த வேண்டும். இன்று வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்கலாம் என்று கூறுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. ஒருவர் செய்த தப்புக்காக எல்லா வேட்பாளரும் தண்டனை பெறக் கூடாது என்பது எங்களுடைய நிலைப்பாடு.

யார் தவறு செய்தார்களோ? அந்த வேட்பாளரை நிச்சயமாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும். நான் பிரசாரத்திற்கு செல்லும் அனைத்து இடங்களிலும் மக்களின் அமோகமான வரவேற்பு கிடைக்கிறது. எங்களின் கூட்டணி ஒட்டுமொத்த மக்கள் வரவேற்கும் கூட்டணியாக உள்ளது. பிரதமர் மோடி தான் இந்த முறையும் பிரதமராக வரப்போகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவருடன் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் நேரு, பொருளாளர் நிர்மல்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.  #LokSabhaElections2019 #PremalathaVijayakanth

Similar News