செய்திகள்

இறுதியில் நீதி வென்றது மகிழ்ச்சி - ஜீவஜோதி பேட்டி

Published On 2019-03-30 03:41 GMT   |   Update On 2019-03-30 03:41 GMT
சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆனாலும், இறுதியில் நீதி வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ஜீவஜோதி கூறினார். #SC #SaravanaBhavan #PRajagopal
தஞ்சை:

தஞ்சாவூரில் வசித்து வரும் அவர், நிருபருக்கு அளித்த பேட்டியில், ‘சுப்ரீம் கோட்டு தீர்ப்பு விவரம் (நேற்று) காலையில் தெரிந்ததும், மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதற்காக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ராஜகோபால் என்னை கொடுமை செய்தபோது, ஜெயலலிதாவை அவரது வீட்டில் சந்தித்து விவரங்களை சொன்னேன். அப்போது அவர் ஆட்சியில் இல்லை. அதே நேரம், அவர் எனக்கு உதவி செய்வதாக உத்தரவாதம் அளித்தார். 2001-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சரானார். சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட போது, அந்த வழக்கை போலீசார் தீவிரமாக புலன்விசாரணை செய்தனர். ஒருவேளை ஜெயலலிதா தற்போது உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்து, காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று இருப்பேன். போலீசாரும் சரியாக புலன்விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளனர். அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆனாலும், இறுதியில் நீதி வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறினார்.

கடந்த 2006-ம் ஆண்டு தண்டபாணி என்பவரை ஜீவஜோதி 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்கள் தஞ்சையில் வசித்து வருகிறார்கள். தண்டபாணி வெளிநாடுகளுக்கு ஊறுகாய், அப்பளம் ஏற்றுமதி செய்கிறார்.

ஜீவஜோதி அதே பகுதியில் தையல் கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். #SC #SaravanaBhavan #PRajagopal
Tags:    

Similar News