செய்திகள்

பட்டுக்கோட்டை அருகே பெண் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை முயற்சி

Published On 2019-03-24 13:28 GMT   |   Update On 2019-03-24 13:32 GMT
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் பெண் கிராம நிர்வாக அலுவலர் வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வாட்டாத்திகோட்டை அடுத்த சென்னியக்குடியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் அபிராமி (வயது 24). இவருக்கும், திருவோணம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய மகேந்திரனுக்கும் (29) பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இந்த நிலையில் அபிராமியின் காதல் விவகாரம், அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அபிராமி, தனது பெற்றோரிடம் , தொடர்ந்து காதலனுடன் திருமணம் செய்து வைக்கும்படி வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

இதற்கிடையே சப்- இன்ஸ்பெக்டர் மகேந்திரன், நாகை மாவட்டம் கீழ்வேளூர் போலீஸ் நிலையத்துக்கு மாறுதலாகி சென்றார்.

அபிராமி, நேற்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரனை திருமணம் செய்வது பற்றி பெற்றோரிடம் போனில் பேசினார். அதற்கு பெற்றோர் மீண்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அபிராமி, திடீரென வி‌ஷம் குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் பற்றி ஒரத்தநாடு போலீஸ் டி.எஸ்.பி. காமராஜ் உத்தரவின் பேரில் வாட்டாத்திக் கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சப்-இன்ஸ்பெக்டரை திருமணம் செய்ய பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் பெண் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News