செய்திகள்
திருச்சியில் நடந்த கூட்டத்தில் பிருந்தா காரத்திடம் கட்சியினர் நிதி வழங்கிய காட்சி

மக்கள் அளிக்கும் வாக்கால் மோடி ஆட்சியும், எடப்பாடி ஆட்சியையும் வீழ்த்தலாம் - பிருந்தா காரத்

Published On 2019-03-12 12:10 GMT   |   Update On 2019-03-12 12:10 GMT
பொதுமக்கள் தாங்கள் அளிக்கும் வாக்கின் மூலம் மத்திய மோடி ஆட்சியையும், மாநில எடப்பாடி அரசையும் வீழ்த்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற தமிழ் பழ மொழியை நிறைவேற்ற வேண்டும் என பிருந்தா காரத் கூறியுள்ளார்.
திருச்சி:

திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிதியளிப்பு கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பேசியதாவது:-

பிரதமர் மோடி தன்னை டீ கடை நடத்தியவர் என்றும், அடித்தட்டு மக்களின் நிலையை உணர்ந்தவர் என்றும் கூறுகிறார். கஜா புயலில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டு புதுக்கோட்டையில் டீ கடை நடத்தி வரும் சிவக்குமார், தனது வாடிக்கையாளர்களின் கடன்களை தள்ளுபடி செய்தார். அவர் தான் உண்மையான டீ கடைக்காரர். டெல்லியில் அமர்ந்து இருப்பவர் மோசடி பேர் வழி.

ரபேல் விவகாரத்தில் ஊழல் செய்து விட்டு ஆவணங்களை காணவில்லை என்கிறது மத்திய அரசு. தமிழகத்தில் குட்காவில் ஊழல் செய்து விட்டு ஆவணங்களை காணவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். 65 ஆண்டுகளாக லாபம் ஈட்டி வந்த பெல் நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நஷ்டத்தை சந்தித்தது. இதற்கு மத்திய அரசின் தவறான கொள்கையே காரணம்.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெற உள்ள தேர்தல் மூலம் டெல்லியின் புதிய அரசையும், அதே நாளில் 18 சட்டசபை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தல் மூலம் தமிழகத்தில் புதிய அரசையும் உருவாக்கும் வாய்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்துள்ளது. 2014 பாராளுமன்ற தேர்தலில் மோடியா? இந்த லேடியா? என்று கேட்ட ஜெயலலிதாவை, பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. வினர் மறந்து விட்டு இன்று மோடியை டாடி என்று அழைக்கும் அளவுக்கு தாழ்ந்து விட்டனர்.

5 ஆண்டு கால மோடி ஆட்சியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 1.1.கோடி பேர் வேலை இழந்துள்ளனர். கிராமப்புற ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் வகையில் செயல்படும் மத்திய அரசு, இத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடியை பாக்கி வைத்துள்ளது. மத்தியில் மதசார்பற்ற, ஊழலற்ற ஆட்சி அமைக்கத்தான் தமிழகத்தில் தி.மு.க.வுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

பொதுமக்கள் தாங்கள் அளிக்கும் வாக்கின் மூலம் மத்திய மோடி ஆட்சியையும், மாநில எடப்பாடி அரசையும் வீழ்த்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்ற தமிழ் பழ மொழியை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் ரூ.12 லட்சம், புறநகர் மாவட்டம் சார்பில் ரூ.18 லட்சம், கரூர், பெரம்பலூர் மாவட்டங்கள் சார்பில் தலா ரூ.1 லட்சம் பிருந்தா காரத்திடம் வழங்கப்பட்டது. #BrindaKarat
Tags:    

Similar News