செய்திகள்

ஒரு எலுமிச்சை பழத்தை ரூ.30 ஆயிரத்துக்கு வாங்கிய ஈரோடு பக்தர் - கோவில் விழாவில் ருசிகரம்

Published On 2019-03-06 23:01 IST   |   Update On 2019-03-06 23:01:00 IST
ஈரோடு அருகே உள்ள கோவிலில் ஏலம் விடப்பட்ட எலுமிச்சை பழத்தை ரூ.30 ஆயிரத்துக்கு பக்தர் ஒருவர் வாங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சிவகிரியை அடுத்த விளக்கேத்தி அருகே புதுஅண்ணாமலை பாளையம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரன் கோவில் உள்ளது.

இங்கு ஆண்டு தோறும் மகாசிவராத்திரி பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மகா சிவராத்திரி பூஜைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து நேற்று மாலை மறுபூஜைகள் நடத்தப்பட்டது. பூஜைகள் நிறைவடைந்த பின்னர், பூஜையில் சாமியின் பாதத்தில்வைக்கப்பட்ட ஒரே ஒரு எலுமிச்சைப் பழம், மறு பூஜை தினமான நேற்றிரவு ஏலம் விடப்பட்டது.

2 ரூபாயில் ஆரம்பித்த ஏல தொகையை சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் போட்டி போட்டு விலையை உயர்த்தி கேட்டனர். ஆயிரங்களை தாண்டி சென்ற ஏலத்தில், ஒரு எலுமிச்சம் பழம் 30 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனது. ஈரோடு 46 புதூரை சேர்ந்த சக்திவேல் என்பவர் எலுமிச்சை பழத்தை ஏலத்தில் வாங்கி சென்றார்.

இதே போல் மகாசிவராத்திரி சிறப்பு பூஜையில் வைக்கப்பட்ட 5 கிராம் எடையுள்ள வெள்ளி மோதிரம் 50 ஆயிரம் ரூபாய்க்கும், வெள்ளி காசு 43 ஆயிரம் ரூபாய்க்கும் பக்தர்கள் போட்டி போட்டு ஏலத்தில் வாங்கினர்..

இந்த எலுமிச்சை மற்றும் வெள்ளி காசுகளை வீட்டில் வைத்து பூஜித்தால் நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக போட்டி போட்டு வாங்கி செல்வதாக பக்தர்கள் கூறினர். இந்த ஆண்டு ஏலத்தில் பெற்ற எலுமிச்சை மற்றும் வெள்ளி காசு, மோதிரத்திற்கான தொகையை அடுத்த ஆண்டு மகாசிவராத்திரியின் போது செலுத்தினால் போதும். விழாவில் பக்தர்கள் வழங்கிய வாழைப்பழம் மலை போல் குவிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

சிவராத்திரி மறுபூஜை விழாவிலும் அதனை தொடர்ந்து நடந்த ஏலத்திலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதே கோவிலில் கடந்த ஆண்டு சிவராத்திரி விழாவில் எலுமிச்சை 6 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடதக்கது. #tamilnews

Similar News