செய்திகள்

வேலூரில் 102.6 டிகிரி வெயில் கொளுத்தியது

Published On 2019-03-06 05:09 GMT   |   Update On 2019-03-06 05:09 GMT
வேலூர் மாவட்டத்தில் கோடையின் தொடக்கமாக 102.6 டிகிரி வெயில் கொளுத்தியது. பகலில் அனல் காற்று வீசியதால் வீதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கோடையில் வெயில் கொளுத்துவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த ஆண்டு கோடை தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.

பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. ஆனால் 3-வது வாரத்தில் இருந்து வெயில் அடிக்க தொடங்கியது. 95 டிகிரி அளவிற்கு வெயில் அடித்தது. 100 டிகிரியை தொடாமல் இருந்தது.

மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து வெயில் அளவு அதிகரித்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 98 டிகிரியை வெயில் கடந்து மக்களை வாட்டி எடுத்தது. நேற்று இந்த ஆண்டின் தொடக்கமாக சதத்தை கடந்து 102.6 டிகிரி வெயில் கொளுத்தியது.

வழக்கத்துக்கு மாறாக நேற்று காலையில் இருந்தே வெயில் சுட்டெரித்ததால் பகலில் அனல் காற்று வீசியது. வெளியே மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இரவிலும் அனல் தெறித்தது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் கடும் சிரமப்பட்டனர்.

இன்று காலையிலேயே வெயில் வாட்டத் தொடங்கியுள்ளது. நேரம் அதிகரிக்க அதிகரிக்க வெயில் சுட்டெரித்தது. கோடை வெயிலை தணிக்க இளநீர், தர்பூசணி, குளிர்பான கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இப்போதே வெயில் இப்படி கொளுத்தினால் இன்னும் ஏப்ரல், மே மாதங்களில், அக்னி நட்சத்திர காலங்களில் எப்படி இருக்குமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16ம் தேதிதான் வெயில் 100 டிகிரியை தாண்டியது. ஆனால் இந்த ஆண்டு கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதற்கு 40 நாட்களுக்கு முன்பே வெயில் 100 டிகிரியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News