செய்திகள்

தலைவர்களின் படங்களுடன் தயாராகும் பனியன்கள்

Published On 2019-03-02 08:37 IST   |   Update On 2019-03-02 08:37:00 IST
தஞ்சையில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோரின் படங்களுடன் கூடிய பனியன்கள் மும்முரமாக தயாராகி வருகின்றன.
தேர்தல் நேரத்தில் தங்களுக்கு பிரசாரம் செய்ய வரும் தொண்டர்களுக்கு அரசியல் கட்சியினர் தலைவர்களின் படங்கள், சின்னங்கள் அச்சிடப்பட்ட பனியன்களை வழங்குவார்கள். அந்த பனியன்களை அணிந்தபடி தொண்டர்கள் வலம் வருவதை பார்க்கலாம்.

இதற்காக தஞ்சையில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோரின் படங்களுடன் கூடிய பனியன்கள் மும்முரமாக தயாராகி வருகின்றன. தாமரை, கை, இரட்டை இலை, உதயசூரியன் உள்ளிட்ட கட்சி சின்னங்களுடன் கூடிய பனியன்களும் தயாரிக்கப்படுகின்றன.

அரசியல் கட்சிகள், 100 அல்லது அதற்கும் மேற்பட்ட பனியன்கள் மொத்தமாக ஆர்டர் கொடுக்கும்போது இவ்வாறு தலைவர்களின் படங்களுடன் பனியன்கள் தயார் செய்து கொடுக்கப்படுகிறது. அரசியல் கட்சியினர் கேட்கும் வண்ணங்களில் தலைவர்களின் படங்கள், வாசகங்கள் அதில் இடம் பெறுகின்றன.

இதுகுறித்து தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள துவாரகா நகரில் பனியன்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுதா சரவணன் கூறுகையில், “தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படும் வகையில் தயார் செய்யப்படும் இந்த பனியன்களுக்கான துணிகள், சூரத்தில் இருந்து வரவழைக்கப்படுகின்றன. அரசியல் கட்சியினர் ஆர்டர் கொடுத்து 3 முதல் 5 நாட்களுக்குள் அவர்கள் விரும்புகிற வகையில் பனியன்கள் தயார் செய்து கொடுக்கப்படும். மேலும் அவர்கள் விரும்பும் வாசகங்களும், படங்களும் அதில் இடம் பெறும். இந்த பனியன் துணிகள் மிகவும் தரமானவை. எப்போதும் பயன்படுத்தும் வகையில் பனியன்களை தயார் செய்து கொடுக்கிறோம்” என்றார்.

Similar News