செய்திகள்

செஞ்சி அருகே கள்ளக்காதலி அடித்து கொலை- வாலிபர் கைது

Published On 2019-01-25 13:29 GMT   |   Update On 2019-01-25 13:29 GMT
செஞ்சி அருகே ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியை அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம்  செஞ்சி அருகே உள்ள பெரும்புகை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி.  இவரது மனைவி குட்டியம்மாள் (வயது 43). இவர்களுக்கு கார்த்தி என்ற மகன் உள்ளான்.

அதே பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன் (25), தொழிலாளி. இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் குட்டியம்மாளின் வீட்டுக்கு அடிக்கடி தேவேந்திரன் வந்து சென்றார். அப்போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இவர்களது கள்ளக்காதல் விவகாரம் தேவேந்திரனின் மனைவி கலைச் செல்விக்கு தெரியவந்தது. கள்ளக்காதலை கைவிடும்படி தனது கணவரிடம் கூறினார். ஆனால், தேவேந்திரன் கேட்கவில்லை.

இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கலைச்செல்வி கோபித்து கொண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த 18-ந் தேதி தேவேந்திரன் தனது கள்ளக்காதலி குட்டியம்மாள் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் தனியாக இருந்தார். குட்டியம்மாளை அவர் தனது ஆசைக்கு இணங்கும்படி உல்லாசமாக இருக்க அழைத்தார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தேவேந்திரன் ஆத்திரம் அடைந்து குட்டியம்மாளை சரமாரியாக தாக்கினார். இதில் குட்டியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் குட்டியம்மாளின் உடலை தேவேந்திரன் யாருக்கும் தெரியாத வகையில் தூக்கி சென்று அந்த பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

வீட்டில் இருந்த தனது தாய் குட்டியம்மாளை காணாததை அறிந்த அவரது மகன் கார்த்தி பல இடங்களில் அவரை தேடிபார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று மாலை கார்த்தி ஆடு மேய்பதற்காக அந்த பகுதியில் உள்ள மலையடிவாரத்துக்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. அந்த இடத்துக்கு சென்று பார்த்தார். அங்கு அவரது தாய் குட்டியம்மாள் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதைப்பார்த்து கார்த்தி கதறி துடித்தார். உடனே செஞ்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குட்டியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வீமராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

குட்டியம்மாளை கொலை செய்த கள்ளக்காதலன் தேவேந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News